குளு, குளு சீசனை அனுபவிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்


குளு, குளு சீசனை அனுபவிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்
x

கொடைக்கானலில் நிலவும் குளு, குளு சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

திண்டுக்கல்

குளு, குளு சீசன்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர்.

இந்தநிலையில் தொடர் விடுமுறை காரணமாக கடந்த 2 நாட்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

சுற்றுலா பயணிகள் ஒரே நேரத்தில் பல்வேறு வாகனங்களில் வந்ததால் கொடைக்கானல் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

குறிப்பாக நகரின் நுழைவு வாயிலான வெள்ளி நீர்வீழ்ச்சி அருகில் சோதனை சாவடி பகுதியில் சுற்றுலா வாகனங்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதனையடுத்து நெரிசல் ஏற்பட்ட இடங்களுக்கு இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையில் கூடுதல் போலீசார் சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். அதன்பிறகு சுற்றுலா பயணிகள், சுற்றுலா இடங்களுக்கு சென்றனர்.

சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கொடைக்கானலில் நேற்று பகலில் வெப்பம் நிலவினாலும், மாலையில் இதமான காற்றுடன் குளிர்ச்சியான சீதோஷ்ண சூழல் நிலவியது. இதனை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.

மேலும் வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரி, மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், பைன்மரக்காடு, பில்லர்ராக், குணாகுகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களை பார்வையிட்டு சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்கினர். இதுதவிர தேவதை அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, பியர்சோழா அருவி உள்ளிட்ட அருவிகளை பார்வையிட்டனர்.

பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள், தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இதேபோல் நகரின் மையப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி மேற்கொண்டு உற்சாகம் அடைந்தனர்.

கட்டண விவரம்

சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்ததால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதேநேரத்தில் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் கட்டண விவரங்களை தெளிவாக தெரியும்படி எழுதி வைக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story