விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்


விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 28 Aug 2023 8:15 PM GMT (Updated: 28 Aug 2023 8:15 PM GMT)

கம்பம் பகுதியில் விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைகின்றனர்.

தேனி

கம்பம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து எரசை, ராயப்பன்பட்டி, சுருளி அருவி, சுருளியாறு மின் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் பழைய பஸ் நிலையம், காமயகவுண்டன்பட்டி பிரிவு பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் நின்று பயணிகளை ஏற்றி சென்றன. இதற்கிடையே கம்பம் நகரில் நாளுக்குநாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. தமிழக-கேரள எல்லையில் கம்பம் நகர் அமைந்துள்ளதால் ஏராளமான வாகனங்களும் கம்பத்துக்கு வருகின்றன. இதனால் நகரின் முக்கிய வீதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து போலீசார் கம்பம் நகரில் ஒருவழிப்பாதை முறை, பஸ் நிறுத்தம் இடமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்படி, காமயகவுண்டன்பட்டி பிரிவு பஸ் நிறுத்தம், பழைய தபால் அலுவலக பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

இருப்பினும் ஆட்டோக்கள் மற்றும் மினி பஸ்கள் போக்குவரத்து விதிகளை மீறி காமயகவுண்டன்பட்டி சாலை பிரிவு பகுதியில் வாகனங்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர். இதுபோன்று போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோ, மினி பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story