டிராவல்ஸ் உரிமையாளர் கள்ளக்காதலியுடன் தற்கொலை


டிராவல்ஸ் உரிமையாளர் கள்ளக்காதலியுடன் தற்கொலை
x

கள்ளக்காதல் ஜோடி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டனர். அருகில் சொகுசு காரில் தாய் இறந்தது தெரியாமல் தூங்கிய 2 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட்டில் நேற்று காலையில் தரையில் ஒரு வாலிபரும், ஒரு இளம்பெண்ணும் இறந்து கிடந்தனர். அருகில் ஒரு சொகுசு கார் நின்றது. இதுபற்றி தகவலறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் வந்து விசாரித்தனர்.

பிறகு அருகில் இருந்த சொகுசு காரை பார்த்தபோது அதில் 2 குழந்தைகள் தூங்கிக் கொண்டு இருந்தனர். தொடர்ந்து இறந்த வாலிபரின் உடலை சோதனையிட்டபோது ஓட்டுனர் உரிமம் இருந்தது. அதை வைத்து விசாரணை நடத்தியபோது, இறந்து கிடந்தவர் கடியப்பட்டணத்தை சேர்ந்த ஆரோக்கிய சூசைநாதன் (வயது 32) என்பதும், இளம்பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரது மனைவி ஷாமினி (30) என்பதும் தெரியவந்தது. அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய கள்ளக்காதல் ஜோடி என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் ஆரல்வாய்மொழிக்கு வந்து தற்கொலை செய்து கொண்டது அம்பலமானது. இதில் காருக்குள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் ஷாமினியின் 7 வயது, 3 வயது உடைய ஆண் குழந்தைகள் என்பதும் தெரியவந்தது. குழந்தைகள் இருவரும் தாய் இறந்தது தெரியாமல் காருக்குள் தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர்.

பரபரப்பு தகவல்

பின்னர் கள்ளக்காதல் ஜோடி பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

அதாவது ஆரோக்கியசூசை நாதன் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.

ஆரோக்கிய சூசைநாதனுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்று தூத்துக்குடி மாவட்டம் கொம்புதுறையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் ஆரோக்கிய சூசைநாதனுக்கும், அருகில் உள்ள வீட்டில் வசித்த வந்த ராஜேஷ் என்பவரது மனைவி ஷாமினிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. மனைவியின் கள்ளக்காதல் பற்றி ராஜேஷிடம் பலர் கூறியும் அவர் நம்பவில்லை. ஷாமினி மீது அந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்தார்.

உயிரை மாய்த்துக் கொண்டது ஏன்?

இந்தநிலையில் ஷாமினி வீட்டை விட்டு வெளியேறி ஆரோக்கிய சூசைநாதனுடன் ஓடிவிட்டார். அதன் பிறகு தான் ஷாமினி தன்னை ஏமாற்றி விட்டார் என்ற அதிர்ச்சி தகவல் ராஜேசுக்கு தெரியவந்தது.

பின்னர் சில நாட்கள் கழித்து ஷாமினி எப்படியோ மீண்டும் கணவரை தேடி வந்தார். பின்னர் கடந்த 17-ந் தேதி மீண்டும் கள்ளக்காதலனுடன் ஓடி விட்டார். இந்த முறை 2 குழந்தைகளையும் அவர் அழைத்துச் சென்றுள்ளார். இதுபற்றி மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஷாமினியையும், குழந்தைகளையும் தேடி வந்தனர்.

இந்நிலையில்தான் இருவரும் ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியில் வாழைப்பழத்தில் விஷம் வைத்து தின்று தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. தற்கொலைக்கு முன்பு காரில் பல இடங்களுக்கு சந்தோசமாக சுற்றி திரிந்த கள்ளக்காதல் ஜோடி இறுதியில் ஆரல்வாய்மொழிக்கு வந்துள்ளனர். கள்ளக்காதலை யாரும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள், எனவே நாம் சாவிலாவது ஒன்று சேர்வோம் என நினைத்து தங்களுடைய உயிரை இருவரும் மாய்த்துக் கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story