இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் பீடி இலை சிக்கியது


இலங்கைக்கு கடத்த முயன்ற   ரூ.15 லட்சம் பீடி இலை சிக்கியது
x

குலசேகரன்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் `கியூ' பிரிவு போலீசாரிடம் சிக்கியது.

கடத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு சமீப காலமாக மஞ்சள், பீடி இலை, களைக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதனை அவ்வப்போது `கியூ' பிரிவு போலீசார், கடலோர பாதுகாப்பு போலீசார் மடக்கி பிடித்து வருகின்றனர்.

இதனால் கடற்கரையோரம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

கண்காணிப்பு

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட `கியூ' பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்ராஜ், ஜீவமணி தர்மராஜ் மற்றும் போலீசார் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு லோடு ஆட்டோவில் கருப்பு பாலிதீன் பை பண்டல்கள் இருப்பதை பார்த்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று அந்த லோடு ஆட்டோவை மடக்கி பிடிக்க முயன்றனர்.

கைது

ஆனால், அதில் இருந்த டிரைவர், லோடு ஆட்டோவை வேகமாக எடுத்து கொண்டு தப்ப முயன்றார். போலீசார் தொடர்ந்து விரட்டியதால், டிரைவர் ஆட்டோவை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

அதே நேரத்தில் அவருடன் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு இருந்த முக்காணியை சேர்ந்த சிபிஸ்டன் (வயது 25) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

ரூ.15 லட்சம்

தொடர்ந்து போலீசார் லோடு ஆட்டோவில் சோதனை நடத்தினர். அதில் 47 மூட்டைகளில் சுமார் 1½ டன் பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதன் சர்வதேச மதிப்பு ரூ.15 லட்சம் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், குலசேகரன்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் அந்த பீடி இலைகளை கடத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பீடி இலை மூட்டைகள், லோடு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்ட சிபிஸ்டன் மற்றும் பொருட்களை சுங்கத்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.


Next Story