வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்


வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்:  கலெக்டர் தகவல்
x

வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி கலெக்டர் தெரிவித்தார்

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்கு மேல் காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழான தகுதிவரை பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ.600 வீதமும், பிளஸ்-2 கல்வி தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.750 வீதமும், பட்டப்படிப்பு பதிவு செய்தவர்களுக்கு ரூ.1,000 வீதமும் பயனாளிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

காலாண்டுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை 2021-22-ம் நிதியாண்டு முதல் மாதந்தோறும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தில் உதவித்தொகை பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தோ, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் பெற்றோ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story