உப்புக்கோட்டை பகுதியில்தக்காளி விலை வீழ்ச்சி


உப்புக்கோட்டை பகுதியில்தக்காளி விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 19 Aug 2023 6:45 PM GMT (Updated: 19 Aug 2023 6:46 PM GMT)

உப்புக்கோட்டை பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

தேனி

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான கூழையனூர், குச்சனூர், பாலார்பட்டி, குண்டல் நாயக்கன்பட்டி, உப்புக்கோட்டை உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முட்டைக்கோஸ், பீட்ரூட், தக்காளி முள்ளங்கி, கத்தரிக்காய், வெங்காயம் ஆகிய காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு ஆண்டின் அனைத்து பருவத்திலும் காய்கறிகள் சாகுபடி செய்யப்படும். முல்லைப்பெரியாறு பாசனம் மூலம் காய்கறிகள் விளைச்சல் அடைவதால் நன்கு சுவையானதாக இருக்கும்.

இதனால் தேனி மட்டுமின்றி வெளிமாவட்டம் மற்றும் கர்நாடகா கேரளா ஆகிய வெளி மாநிலங்களிலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி காய்கறிகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. கடந்த மாதம் கடைமடை பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டது.

போதிய பாசன வசதி மற்றும் நோய்தாக்குதல் இல்லாததால் தக்காளி நன்கு விளைச்சல் அடைந்து உள்ளது. தற்போது அவை பறிக்கப்பட்டு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.100-யை தாண்டி விற்பனை செய்தது. ஆனால் தற்போது அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 15 கிலோ அடங்கிய ஒரு கூடை தக்காளி கடந்த வாரம் ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு கூடை தக்காளி ரூ.450 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை சரிவு காரணமாக தக்காளி சாகுபடி செய்த கடைமடை பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Related Tags :
Next Story