கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்த 30-ந் தேதி கடைசி நாள்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்த 30-ந் தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 23 Sep 2022 6:46 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வருகிற 30-ந் தேதி வரை மட்டுமே இலவசமாக செலுத்தப்படும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தடுப்பூசி முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 1,126 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், 2-வது தவணை செலுத்தி கொள்ள வேண்டியவர்கள் பயனடையும் வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் என மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டு பகுதிகள், ஊராட்சி, கிராம பகுதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நடத்தப்பட உள்ளது.

கடைசி நாள்

இந்த வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொண்டு, தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இதில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

முன்களப்பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் 18 முதல் 59 வயதிற்குட்பட்ட நபர்கள் 182 நாட்கள் கழித்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசியினை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சிறப்பு மருத்துவ முகாம்களில் வருகிற 30-ந் தேதி வரை இலவசமாக செலுத்தி கொள்ளலாம்.

30-ந் தேதிக்கு பிறகு இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள இயலாது. எனவே இந்த வாய்ப்பினை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்தி கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story