பருத்தி விவசாயத்திற்கு பயன்படும் வைகை தண்ணீர்


பருத்தி விவசாயத்திற்கு பயன்படும் வைகை தண்ணீர்
x
தினத்தந்தி 17 March 2023 6:45 PM GMT (Updated: 17 March 2023 6:45 PM GMT)

நெல் விவசாயத்தை தொடர்ந்து பருத்தி மற்றும் மிளகாய் விவசாயத்திற்கும் திருஉத்தரகோசமங்கையில் உள்ள விவசாயிகளுக்கு வைகை தண்ணீர்் பயன்படுகிறது.

ராமநாதபுரம்

திருஉத்தரகோசமங்கை,

நெல் விவசாயத்தை தொடர்ந்து பருத்தி மற்றும் மிளகாய் விவசாயத்திற்கும் திருஉத்தரகோசமங்கையில் உள்ள விவசாயிகளுக்கு வைகை தண்ணீர்் பயன்படுகிறது.

வைகை தண்ணீர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பருவமழையை எதிர்பார்த்துதான் பொதுமக்களும், விவசாயிகளும் உள்ளனர். இந்த மாவட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட கண்மாய் மற்றும் ஊருணிகளும் உள்ளன. இந்த கண்மாய் மற்றும் ஊருணிகள் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகின்றது. இந்த கண்மாய் மற்றும் ஊருணிகள் ஆண்டுதோறும் பருவமழை சீசனில் பெய்யும் மழையால்தான் நிரம்புவது வழக்கம். அதிகமான கண்மாய் மற்றும் ஊருணிகள் இருந்தாலும் குறைவான கண்மாய் மற்றும் ஊருணிகளுக்குதான் வைகை தண்ணீர் பாசன வசதிகள் உள்ளது.

இந்த நிலையில் திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் உள்ள கண்மாயானது கடந்த ஆண்டு மதுரை வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட வைகை தண்ணீர் வரத்தால் நிரப்பப்பட்டது. தற்போது வரை தண்ணீர் குறையாமல் கடல் போல் திருஉத்தரகோசமங்கை கண்மாய் காட்சி அளித்து வருகின்றது. பருவமழை சீசனில் மழையே பெய்யாமல் இருந்த நிலையிலும் இந்த கண்மாயில் இருந்த தண்ணீரை பயன்படுத்தி நெல் விவசாயத்திற்கு விவசாயிகள் பயன்படுத்தினர்.

பருத்தி, மிளகாய் விவசாயம்

தற்போது வரை கண்மாயில் அதிகமான தண்ணீர் இருப்பு உள்ளதால் பருத்தி விவசாயத்திற்கு இந்த தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் திருஉத்தரகோசமங்கை அருகே களக்குடி கிராமத்தில் உள்ள கண்மாயிலும் வைகை தண்ணீர் வரத்தால் கண்மாய் நீர் நிரம்பி காணப்படுகின்றது. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகளும் பருத்தி மற்றும் மிளகாய் விவசாயத்திற்கும் இந்த கண்மாய் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். கண்மாயில் உள்ள வைகை தண்ணீர் இருப்பால் இந்த ஆண்டு பருத்தி மற்றும் மிளகாய் விவசாயத்திற்கு இந்த தண்ணீர் பயன்படுத்துவதற்கு வசதியாக உள்ளதாக மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய் மற்றும் ஊருணிகளுக்கும் வைகை தண்ணீர் கொண்டு வருவதற்கான வழித்தடங்களை உருவாக்கி பாசன வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் திட்டத்தை தயார் செய்து செயல்படுத்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story