வேன் டிரைவர் வீட்டில் புகுந்து ரூ.4½ லட்சம் நகை, பணம் கொள்ளை


வேன் டிரைவர் வீட்டில் புகுந்து ரூ.4½ லட்சம் நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 28 April 2023 6:45 PM GMT (Updated: 28 April 2023 6:46 PM GMT)

பெண்ணாடத்தில் நள்ளிரவில் வேன் டிரைவர் வீட்டில் ஓட்டைப்பிரித்து புகுந்து ரூ.4½ லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

கடலூர்

பெண்ணாடம்

வேன்டிரைவர்

பெண்ணாடத்தை அடுத்த தொளார் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 29). வேன் டிரைவரான இவர் தற்போது மாளிகைகோட்டம் பஸ் நிறுத்தம் அருகே வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அய்யப்பன் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். பின்னர் நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் மேற்கூரையில் இரு இடங்களில் ஓடுகள் பிரிக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நகை, பணம் கொள்ளை

உடனே வீட்டின் அறையில் சென்று பார்த்தபோது பீரோவின் கதவுகள் திறந்து கிடந்தன. அதில் இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 4 பவுன் நகை, வீட்டு மனை வாங்குவதற்காக வைத்திருந்த ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.4½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து பெண்ணாடம் போலீஸ் நிலையத்துக்கு அய்யப்பன் தகவல் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்கள் சிக்கி இருக்கிறார்களா? என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

பரபரப்பு

நள்ளிரவில் வேன் டிரைவர் வீ்ட்டில் புகுந்து நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெண்ணாடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story