கெடார், ஒதியத்தூர், மணலப்பாடி ஊராட்சிகளில்தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் பங்கேற்பு


கெடார், ஒதியத்தூர், மணலப்பாடி ஊராட்சிகளில்தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் பங்கேற்பு
x
தினத்தந்தி 1 May 2023 6:45 PM GMT (Updated: 1 May 2023 6:46 PM GMT)

கெடார், ஒதியத்தூர், மணலப்பாடி ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடந்த கிராம சபை கூட்டங்களில் அமைச்சர்கள் பொன்முடி , செஞ்சி மஸ்தான் பங்கேற்றனர்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கெடார் ஊராட்சி, முகையூர் ஒன்றியம் ஒதியத்தூர் ஆகிய ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபைகூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். புகழேந்தி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அனைத்துத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை ஊராட்சி மன்ற தலைவர்களிடம் தெரிவித்து திட்டங்களைப்பெற்று பயனடையலாம். உங்களது குழந்தைகளை கட்டாயம் படிக்க வையுங்கள். பெண் பிள்ளைகள் படித்தால்தான் நாட்டின் வளர்ச்சி உறுதி செய்யப்படும். எனவே அனைவரும் அரசுப்பள்ளியில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து அரசால் வழங்கப்படும் பல்வேறு சலுகைகளை பெற்று பயனடைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், காணை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் என்.கலைச்செல்வி, முகையூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் உ.தனலட்சுமி, ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர்கள் வீரராகவன், மணிவண்ணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா, ஆர்.பி.முருகன், ஆர்.முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சிவக்குமார், ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் இந்திரா மணி, அமுதாதேவி வீரன், ஒன்றிய கவுன்சிலர்கள் கருணாகரன், மணிகண்டன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பொன்னம்பலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனுவாசன், நாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மணலப்பாடி ஊராட்சி

செஞ்சி ஊராட்சி ஒன்றியம் மணலப்பாடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மண்ணு வரவேற்றார். செஞ்சி ஒன்றியக் குழு தலைவர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீதாலட்சுமி, வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசுகையில், கிராமத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது.

மேலும் இங்கே கோரிக்கைள் குறித்து சிலர் பேசினார்கள். அவைகளை சரிசெய்வதுடன், பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் பள்ளி சிறுமி கேட்டதுக்கு இணங்க விரைவில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்தப்படும் என்றார் அவர்.

கூட்டத்தில் ஒன்றியக் குழு துணை தலைவர் ஜெயபாலன், ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், நெடுஞ்செழியன், தாசில்தார் நெகருன்னிசா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலா, துணைத் தலைவர் உண்ணாமலை சங்கர், ஊராட்சி செயலாளர் ஏழுமலை, நிர்வாகிகள் அய்யாதுரை, வாசு, ஆனந்தன் மற்றும் அனைத்து ஊராட்சி உறுப்பினர்கள், மகளிர் குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story