வைகை அணை நீர்மட்டம் 62 அடியாக உயர்வு


வைகை அணை நீர்மட்டம் 62 அடியாக உயர்வு
x

நீர்வரத்து அதிகரித்ததால் வைகை அணையின் நீர்மட்டம் 62 அடியாக உயர்ந்தது

தேனி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் பாசன கால்வாய் வழியாக திறக்கப்பட்டது. இதற்கிடையே நீர்வரத்து இல்லாத நிலையில், அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வந்தது.

இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கடந்த வாரம் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 69 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது நீர்வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நீர்மட்டம் 6 அடி உயர்ந்துள்ளது. இன்று அணையின் நீர்மட்டம் 62.34 அடியாக இருந்தது. இதனால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story