தொடர் மழையால் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலி


தொடர் மழையால் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலி
x

தொடர் மழையால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகினர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை யாரப் தர்காவில் உரூஸ் திருவிழா நடந்தது. இதையொட்டி தர்கா அருகே அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் பேன்சி மற்றும் பொம்மை விற்பனை செய்யும் கடைகள் அமைத்திருந்தனர். விழா முடிந்ததை தொடர்ந்து நேற்று காலை அவர்கள் கடையை காலி செய்து, பொருட்களை மூட்டையாக கட்டி கொண்டிருந்தனர்.

அப்போது மழை காரணமாக அங்கு தனியார் நிலத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த 8 அடி உயர சுற்றுச்சுவர் திடீரென இடிந்தது. இந்த சுற்றுச்சுவரின் இடிபாடுகள் பேன்சி மற்றும் பொம்மை கடைகள் மீது விழுந்தது. இதில் கடையில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்கு இடையே சிக்கினர்.

2 பேர் பலி

இடிபாடுகளில் சிக்கிய அசாம் மாநிலத்தை சேர்ந்த பேன்சி கடைக்காரர்கள் ஹாமியன் பேகம் (வயது 35), ரபிக்வுல் இஸ்லாம் (22), இசாத் அலி (35) மற்றும் தேன்கனிக்கோட்டை ஜெய் தெருவை சேர்ந்த சகானா (11), ஹேமாவதி (12) ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இதையடுத்து அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் செல்லும் வழியில் அசாம் மாநில பெண் ஹாமியன் பேகம் பரிதாபமாக இறந்தார். இதேபோல் சகானாவும் பலியானார். படுகாயம் அடைந்த மற்ற 3 பேருக்கும் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவில் சுவர் இடிந்தது

இதேபோல் கோவை மாவட்டம் ஆனைமலை அருகே எட்டித்துறை பகுதியில் புத்து மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று மாலை அந்த பகுதியில் கன மழை பெய்தது. இதனால் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான நடராஜ் (50), முருகன் என்பவரின் மகன் ஹரி (13) உள்ளிட்ட 5 பேர் கோவில் அருகே மழையில் நனையாமல் இருக்க ஒதுங்கி நின்றனர்.

அப்போது திடீரென கோவிலின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் 5 பேரும் சிக்கினார்கள்.

சிறுவன் உள்பட 2 பேர் பலி

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் ஹரி மற்றும் நடராஜ் ஆகியோர் இறந்தது தெரியவந்தது.

மற்ற 3 பேரும் படுகாயத்துடன் உயிர் தப்பினார்கள். அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.


Next Story