காதல் வேண்டும்; காதலர் தினம் வேண்டுமா?


காதல் வேண்டும்; காதலர் தினம் வேண்டுமா?
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 13 Feb 2023 6:46 PM GMT)

உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. காதல் வேண்டும்; காதலர் தினம் வேண்டுமா? என்று காதல் ஆர்வலர்கள் கருத்து தொிவித்துள்ளனா்.

கடலூர்

''காதல்'' இந்த ஒற்றைச் சொல் உருவாக்கிய காவியங்களும், காப்பியங்களும் உலகில் ஏராளம். காதல் பூக்களை மட்டுமல்ல, பல்வேறு போர்க்களங்களையும் கண்டுள்ளது. வயது வித்தியாசம் இல்லை, மொழியும், இனமும், மதமும் இதற்கு தடை இல்லை. தூரங்கள் இதற்கு துளியும் தடையுமில்லை. கூடு விட்டு கூடு பாயும் மாய வித்தை போல், கண்டம் விட்டு கண்டம் பாயும் சக்தி இந்த காதலுக்கு உண்டு.

ஒருவரையொருவர் நேரில் பார்க்காமல் உணர்வுகளால் காதலித்த பல சம்பவங்களை பல்வேறு காப்பியங்களில் படித்துள்ளோம். ஆனால் இன்று அதுவும் சாத்தியம் என்பதை பல சம்பவங்கள் நிரூபித்துக் கொண்டுதான் உள்ளது. எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும் காதல் ஒன்றே உணர்வுபூர்வமாக மாறாததாக இருந்து வருகிறது. உலகம் காணும் ஒற்றை மதம் காதல். மனிதனுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த ஜீவராசிகளுக்கும் பொதுவானது காதல். இத்தனை சிறப்புமிக்க காதலைத் தீண்டாமல் தம் வாழ்வைத் தாண்டியோர் சொற்பமே!

காதலர் தினம்

ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் (வாலன்டைன்ஸ் டே) கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு காரணங்கள் கதைகளாக கூறப்படுகிறது. கி.பி.270-ம் ஆண்டு ரோமாபுரி பேரரசர் தமது நாட்டு படைவீரர்கள் திருமணம் செய்யக் கூடாது என கட்டளையிட்டார். ஆனால் 'வாலன்டைன்' என்ற பாதிரியார் அரசருக்கு தெரியாமல் காதலிக்கும் படை வீரர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். இதனால் கோபமடைந்த அரசர் பாதிரியார் வாலன்டைனுக்கு மரண தண்டனை விதித்து சிறையில் அடைத்தார்.

சிறையில் இருந்து போது சிறை அதிகாரியின் பார்வையற்ற மகள் அஸ்டோரியஸ் என்பவருக்கும் வாலன்டைனுக் கும் காதல் ஏற்பட்டது. இதையறிந்த அவரது தந்தை அஸ்டோரியசை வீட்டுக் காவலில் வைத்தார். பிறகு வாலன்டைனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது அவர் அஸ்டோரியசுக்கு எழுதிய கடிதம் தூதுவர்கள் மூலம் கிடைத்த போது வாலன்டைன் இறந்து விட்டார். அவர் மரணித்த பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சமீப காலமாக உலகம் முழுவதும் காதலர் தினம் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக காதலர் தினம் அனைத்துப் பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.

கலாசாரம்

தமிழர் வாழ்விலும், கலாசாரத்திலும் காதல் என்பது புதிது அல்ல. தமிழர்கள் தொன்மைக் காலம் தொட்டே கலையிலும், கலாசாரத்திலும், காதலிலும், வீரத்திலும் சிறந்து விளங்கி உள்ளனர்.

தமிழர்களின் பல்வேறு காப்பியங்களில் காதலுக்கு கொடுத்துள்ள முக்கியத்துவமே இதற்குச் சான்று. சங்க காலப் பாடல்களில் காதலும், கலப்பு மணமும், காந்தர்வ திருமணங்களும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. சங்க காலம் முடிந்து, நவீன காலம் தொடங்கிய பிறகே காதலின் பரிணாமமும் மாறத் தொடங்கியது.

சீரழிவு

கருப்பு -வெள்ளை சினிமா காலங்களில் காதல் என்பது மிகவும் புனிதமானதாகவே காட்டப்படும். சினிமாவில் கூட நாயகனும், நாயகியும் தொட்டுப் பேசுவதோ, கட்டிப் பிடித்து ஆடுவதோ தவிர்க்கப்பட்டது. காரணம், காதல் என்ற வார்த்தையே அப்போது கலாசார சீரழிவாக பார்க்கப்பட்டது. அந்தக் காலங்களில் அரசர்கள் வாழ்வியலும், புராணங்களும் மட்டுமே திரைப்படமாக உருவாக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து வண்ணப்படங்கள் உருவான காலத்தில் கூட காதலை மிகவும் மென்மையாகவும், உணர்வு பூர்வமானதாகவும் மட்டுமே திரை உருவாக்கம் செய்யப்பட்டது. 1950 முதல் 1970 கால கட்டங்கள் வரை திரைப்படங்களுக்கும், மேடை நாடகங்களுக்கும் காதல் என்ற வார்த்தை கொண்ட பெயர் கூட சூட்டப்படாத நிலைதான் இருந்தது. அப்போதெல்லாம் குடும்ப படங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தன. காரணம், சமூகத்தில் காதல் என்பது கலாசார சீரழிவாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்தது. சமூகத்தின் பார்வைதான் சினிமாவிலும் எதிரொலித்தது.

கொடி கட்டியது

பட்டிதொட்டியெங்கும் 1980-க்கு பிறகு சினிமாக்களில் காதல் கொடி கட்டி பறக்கத் தொடங்கியது. குறிப்பாக, திரைப்பட பாடல்களில் காதலுக்கான முக்கியத்துவம் தலைதூக்கியது. சமூகத்தில் எழுந்த மாற்றமும், காதலின் தாக்கமும் தான் சினிமாவில் எதிரொலிக்க தொடங்கியதாக இயக்குனர்கள் தெரிவித்தனர். அதே வேளையில் சினிமாவில் காட்டப்பட்ட காதல் காட்சிகளும், பாடல்களின் வரிகளும் தான் இளைஞர்களிடையே காதல் மோகத்தை உருவாக்கியது என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு. எது எப்படியோ பள்ளி தொடங்கி கல்லூரி மாணவர்கள் வரை காதலிப்பது என்பது கட்டாயம் என்ற அளவிற்கு காதல் பரவ தொடங்கியது. இருப்பினும் அந்த காலக்கட்டத்தில் காதலிப்பவர்கள் சந்திப்பதும், பழகுவதும் மிகவும் அபூர்வமாகவே இருந்தது.

கருப்பு- வெள்ளை திரைப்படங்களில் ''நாதா'' என்று நாயகி அழைக்க 10 அடி தூரத்திற்கு அப்பால் நிற்கும் நாயகன் ''கண்ணே'' என்று விளித்து காதல் பாட்டு பாடுவார். சமூகத்திலும் காதலர்கள் அந்த நிலையில் தான் இருந்தனர். ஒருவரையொருவர் பார்ப்பதும், பழகுவதும், பேசுவதும் மிகவும் அரிதான சம்பவமாகவே இருந்தது.

அதன்பிறகு கலர் படங்களில் மலர்கள் ஒன்றோடொன்று உரசிக் கொள்வது போல் காண்பிப்பார்கள். அதன்படி காதலும் மெல்ல மெல்ல அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியது. காதலர்கள் கல்லூரிகளிலும், பூங்காக்களிலும், கோவில்களிலும் சந்தித்து தங்கள் காதலை தைரியமாக வெளிப்படுத்த தொடங்கினார்கள். இருப்பினும் கடிதங்கள் மட்டுமே அவர்களுக்கு தகவல் தொடர்பு கருவியாக இருந்தது. எழுதிய கடிதங்களை கொடுக்க தைரியமில்லாமலும், துளிர்த்த காதலை வெளிப்படுத்த துணிச்சல் இல்லாமலும் எத்தனையோ காதல்கள் மடிந்து போன வரலாறும் உண்டு.

''2 கே கிட்ஸ்''

இன்றைய நவீன காலத்தில் குறிப்பாக ''2 கே கிட்ஸ்'' என்று அழைக்கப்படும் 2000-க்கு பிறகு காதலும் புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது. உலகமயமாக்கலுக்கு பிறகு ஆண்டு தோறும் காதலர் தினம் கூட மிகப்பெரிய வணிகத்திருவிழாவாக உருவெடுத்துள்ளது.

பிப்ரவரி 14-ந் தேதியை மையமாக வைத்து பல்வேறு வணிகம் கட்டியமைக்கப்படுகிறது. ரோஜா மலர்களின் ஏற்றுமதியும், பூங்கொத்து, வாழ்த்து அட்டை, சாக்லெட், கேக்குகள் என காதலர்கள் பரிமாறிக் கொள்ளும் பொருட்களின் ஏற்றுமதியும், இறக்குமதியும் பல கோடியைத் தாண்டுகிறது. இயற்கையாக நிகழும் காதல் என்ற உணர்வு இன்று வியாபாரத்திற்காக செயற்கையாக கட்டமைக்கப்படுகிறதோ என்ற எண்ணம் பல்வேறு தரப்பிலும் உருவாகி உள்ளது.

குறுகியகால சாகுபடி

நவீன அறிவியல் மாற்றங்களால் செல்போன், இண்டர்நெட் வளர்ச்சியால் காதலும் புதுப்புது அவதாரம் எடுத்துள்ளது என்பதே நிஜமாகும். அப்போதெல்லாம் காதலைச் சொல்லவே பல ஆண்டுகள் காத்திருப்பார்கள். சொல்லாத காதலும், எத்தனை எத்தனையோ. ஆனால் இப்போதுள்ள வாட்ஸ்-அப், டுவிட்டர் உலகில் காதலை வெளிப்படுத்துவது என்பது மிகவும் எளிதாகி விட்டது. அனுப்பிய தகவலில் ஊதா நிற டிக் வந்துவிட்டதா? என்பது மட்டுமே இன்றைய இளம் தலைமுறையினர் காதலுக்காக காத்திருக்கும் காலம்.

அதேபோல் காதலியோ அல்லது காதலனோ நிராகரிப்பிற்காக வருத்தப்பட்டதெல்லாம் போன தலைமுறை. இப்போதெல்லாம் காதல் என்பதே குறுகிய கால சாகுபடி போல் மாறிவிட்டது. அறுவடை முடிந்து விட்டால் அடுத்த பட்டத்திற்கு தயாராவது போல் ''டேட்டிங்'' பிரேக்கிங்'' என காதலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி உள்ளனர்.

''மாமாக் குட்டி''

இன்றைய இண்டர்நெட் காலத்தில் காதலை பாரமாக தூக்கி சுமப்பதை தவிர்த்து விட்டோம் என்கிறார்கள் இளைய தலைமுறையினர். பிடிக்கும் வரை பழகுகிறோம், கசக்கும் போது விலகுகிறோம் இதுதான் இவர்களது காதல் பார்முலா. திருமண வாழ்க்கை முறையில் கூட மேற்கத்திய கலாசாரமான ''லிவிங் டுகெதர்'' வேகமாக பரவி வருவதே இதற்கு சான்று. சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ''லவ்டுடே'' திரைப்படத்தில் இன்றைய செல்போன் தலைமுறையின் காதல் அனுபவத்தை யதார்த்தமாக காட்சிப்படுத்தி இருப்பதை காண முடியும். அந்த படத்தில் தனது முன்னாள் காதலரை நாயகி ''மாமாக் குட்டி'' என்று செல்போனில் பதிவு செய்து வைத்திருப்பார். மாமாக்குட்டி என்ற வசனம் இன்றைய இளைஞர்களிடம் மிகப்பெரிய ''டிரெண்டிங்''.

அதேபோல்தான் காதல் கடந்து வந்த பாதையும். கருப்பு- வெள்ளை காலத்தில் ''நாதா'' என்று தொடங்கிய நாகரீக வசனம் அன்று நவீன காலத்தில் ''மாமாக்குட்டி'' என்று கடந்து வந்துள்ளது. இருப்பினும் திகட்ட, திகட்ட இந்த உலகம் காதலை கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறது.

கருத்து

அந்தக் காதல் தற்போது சரியான பாதையில் பயணிக்கிறதா? காதலர் தினம் அவசியம்தானா? இதனால் நம்முடைய கலாசாரத்திற்கும், பண்பாட்டுக்கும் ஆபத்து ஏற்படுகிறதா? என்பவை குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துகளை தெரிவிக்கின்றனர். அவற்றை பார்ப்போம்:-

பெற்றோர் சம்மதம் தேவை

சிதம்பரத்தை சேர்ந்த மேகநாதன்- பல் டாக்டர் ரமாமணி தம்பதியர் கூறுகையில், இன்றைய காலக்கட்டத்தில் சிறு வயதிலேயே புரிந்து கொள்ளாமல், பள்ளி, கல்லூரி படிக்கும் போதே காதல் திருமணம் செய்து வருகிறார்கள். பெற்றோருக்கு தெரியா மல், பெற்றோரை ஏமாற்றி திருமணம் செய்வது தவறு. சரியான வயதில் காதல் செய்து, பெற்றோர்கள் சம்மதத் துடன் காதல் திருமணம் செய்து கொள்ள வேண்டும். காதல் திருமணம் செய்யும் போது, பெற்றோருக்கு எவ்வித மன வருத்தமும் வந்து விடக்கூடாது. அவர்கள் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டுமே தவிர, ஏமாற்றி விட்டு செல்லக்கூடாது. காதல் திருமணம் செய்வது நல்லது தான். ஆனால் அதை பெற்றோர் சம்மதத்துடன் செய்ய வேண்டும் என்பதே எங்களின் கருத்து என்றனர்.

கலாசாரத்திற்கு எதிரானது

இந்து முன்னணி கடலூர் மாவட்ட செயலாளர் மணிகண்டன் கூறுகையில், காதலர் தினம் என்பது நமது கலாசாரத்திற்கு எதிரானது. தேவையில்லாத செயல். நம்முடைய கலாசாரம் கூட்டுக்குடும்பம், பெரியவர்களை மதிப்பது தான். நாம் எந்த முடிவு எடுத்தாலும் பெற்றோர்களிடம் கேட்டே முடிவு செய்கிறோம்.

ஆனால் காதலர் தினம் மேலை நாடுகளில் இருந்து பரவி உள்ளது. இது தடுக்கப்பட வேண்டும். நாம் அன்றாட வாழ்வியலில் அன்பு, காதல் நிறைந்து இருக்கிறது. இதற்கென ஒரு விழாவை கொண்டாடுவதை ஏற்க முடியாது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் கலாசாரப்படி நாம் வாழ்ந்து வருவதால், இது போன்ற தினங்கள் நமக்கு தேவை இல்லை. வணிக நிறுவனங்கள் தான் இதை ஊக்குவிக்கின்றன. அவர்களுக்கு இது போன்ற தினங்களில் பொருட்கள் விற்பனை செய்ய வேண்டும். மற்றபடி இது நமது கலாசாரத்தை சீரழிக்கும் செயல் என்றார்.

காதலுக்கு அச்சாணி

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அருண்-கவுசல்யா தம்பதியர் கூறுகையில், காதலர் தினம் தேவையான ஒன்று தான். அன்பை ஒருவருக்கொருவர் பரிமாறி கொள்ளும் தினம். அன்றைய நாளில் காதலர்கள் தங்கள் காதலிக்கும், காதல் திருமணம் செய்தவர்கள் தங்கள் மனைவிக்கும் பரிசு கொடுத்து வாழ்த்து தெரிவியுங்கள். பெற்றோர்கள் விருப்பபடி திருமணம் செய்தாலும் காதல் என்பது அனைவருக்கும் பொதுவானது தான். அன்பை வெளிப்படுத்துவதில், பேதம் பார்க்க வேண்டாம். இரு மனங்களின் சங்கமமே காதலுக்கு அச்சாணி. அந்த அச்சாணி முறிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் காதல் பட்டொளி வீசி பறக்கும். அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள் என்றனர்.

கூத்தப்பாக்கத்தை சேர்ந்த ரவி-விஜயஸ்ரீ தம்பதியர் கூறுகையில், நாங்களும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான். ஆனால் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். காதல் என்பது புரிதல். அந்த புரிதல் இருவருக்கும் இருக்க வேண்டும். உண்மையான காதல் இருந்தால், அந்த காதல் திருமணம் வரை செல்கிறது. அப்படி இல்லையென்றால் பாதியிலேயே பிரேக்அப் ஆகிவிடுகிறது. காதல் இருந்தால் தான் விட்டு கொடுத்து வாழ முடியும். ஆனால் விட்டு கொடுக்கும் பழக்கம் இன்று குறைந்து வருகிறது. இதனால் தான் பல காதலர்கள் திருமணத்திற்கு முன்பே பிரிந்து விடுகிறார்கள். ஆகவே உண்மையாக நேசியுங்கள். வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்றனர்.

வாழ்க்கை தத்துவம்

திரு.வி.க. நகரில் 80-வது வயது பிறந்தநாளை கொண்டாடும் பாலசுந்தரம்- சரஸ்வதி தம்பதியினர் கூறும் போது, 'உடல் உணர்ச்சிகளை மறந்து உள்ளத்தை மட்டுமே பார்த்தது தான் அன்றைய காதல். ஆனால் தற்போது 'கண்டதும் காதல், கொண்டது கோலம்' என்ற நிலையில்தான் இருக்கிறது. காதல் செய்பவர்களை தடுக்க முடிவதில்லை. அவர்கள் வழியில்தான் நாமும் தற்போது போக வேண்டியிருக்கிறது. கிடைத்த வாழ்க்கையை காதலர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்க்கை தத்துவமான, ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுப்பது, பிறருடைய குற்றம் காண்பதிலும் பிறரைக் குறை சொல்வதிலும் நேரத்தை செலவிடாதீர்கள். நாக்கைக் கட்டுப்படுத்தினால் உள்ளத்தையும், உடலையும் எளிதாக வசப்படுத்த முடியும். அதேபோல், பெற்ற தாயைப் போற்றுங்கள். அவளின் தியாகமே உங்களை ஆளாக்கியது என்பதை மறவாதீர்கள். கட்டுப்பாடான வாழ்க்கை, நல்லொழுக்கம் இருந்து விட்டால் நம் வாழ்வே சொர்க்கமாக மாறி விடும். இதனை கடைப்பிடித்து தான் நாங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று தற்போது 80 வயதை கடந்து உள்ளோம் என்பதை அனைவரும் மறக்க வேண்டாம்' என்றார்.

காதல் செய்வீர்

விருத்தாசலத்தை சேர்ந்த ராம்பிரகாஷ்- கீதா தம்பதியர் கூறுகையில், காதல் என்பது அன்பின் மிகுதி. காதல் என்றும் சுகமானது.கனவுகளும், நினைவுகளும் புதுவிதமானது.ஏதோ ஒரு சூழ்நிலையில் மனிதன் காதல் வசப்படுகிறான். காதல் இனம், மொழி, மதம், சாதி என அத்தனை பேதங்களையும் கடந்தது. காதல் சிலரை சாகத்தூண்டியும் இருக்கிறது. சிலரை சாதனையாளராக மாற்றியும் இருக்கிறது. காதல் இல்லையேல் மனித வாழ்வே இல்லை. ஆகவே காதல் செய்வீர் என்றனர்.


Next Story