குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்


குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்
x
தினத்தந்தி 31 March 2023 6:45 PM GMT (Updated: 31 March 2023 6:46 PM GMT)

நாகை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஊராட்சி குழு கூட்டம்

நாகையில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் ராம்குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

கணேசன் (அ.தி.மு.க.):-நாகை ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.

ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்

சுப்பையன் (அ.தி.மு.க.):- வேதாரண்யம் முள்ளியாறு, மானங்கொண்டானாறு, வடிகால் வாய்க்கால்களில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்.

குமாரசாமி (தி.மு.க.):- மல்லியம்-மயிலாடுதுறை இடையே நிறுத்தப்பட்ட பஸ் போக்குவரத்தை மீண்டும் தொடங்கியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிற்படுத்தப்பட்ட நலத்துறை சார்பாக மானியத்துடன் கூடிய மும்முனை மின்சார இணைப்பு வழங்குவதற்கு நீண்ட நாட்களாக குழு அமைக்கப்படாமல் உள்ளது அதற்கு குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீர் தட்டுப்பாடு

சரபோஜி (இ.கம்யூ):- மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் குடிநீர் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோடை காலத்தில் இந்த பிரச்சினை அதிகமாகும். எனவே வரும் காலத்தை கருத்தில் கொண்டு நீர் ஆதாரத்தை பெருக்கி குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்லூர் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருவதால், இங்கு கால்நடை ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும்.நாகையில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. புறநகர் பஸ் நிலையத்தை செல்லூர் பகுதியில் அமைக்க வேண்டும்.

டாக்டர்கள் பற்றாக்குறை

ஆனந்தன் (தி.மு.க.):- மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறையாக உள்ளதை பலமுறை கூட்டத்தில் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பொதுமக்களின் நலனை கருதி டாக்டர்கள் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். திருவெண்காடு பகுதியில் புதிய இணைப்புகளுக்கான மின் மீட்டர் தட்டுப்பாடாக உள்ளது. விண்ணப்பித்து பல மாதங்களாகியும் கிடைக்காமல் நுகர்வோர் அவதி அடைந்து வருகின்றனர். தேவைப்படும் அளவு மின் மீட்டரை, மின் துறையினர் கையிருப்பில் வைத்துக் கொண்டு வழங்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.


Next Story