ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக குறைந்தது அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 2-வது நாளாக தடை


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக குறைந்தது  அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 2-வது நாளாக தடை
x

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக குறைந்தது. அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 2-வது நாளாக நீடிக்கிறது.

தர்மபுரி

பென்னாகரம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக குறைந்தது. அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 2-வது நாளாக நீடிக்கிறது.

கனமழை

தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கர்நாடக மாநிலம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதையடுத்து அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. அதன்படி நேற்று மாலை 4 மணி நிலவரப்படி ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக குறைந்தது. நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

2-வது நாளாக தடை

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்த போது சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நேற்று 2-வது நாளாக நீடித்தது. இதனால் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை நுழைவு வாயிலை பூட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று விடுமுறை என்பதால் ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் மடம் சோதனைச்சாவடியில் சுற்றுலா பயணிகள் தடுத்து நிறுத்தி போலீசார் அனுப்பினர். இருப்பினும் போலீசார் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.


Next Story