ஆடம்பர விழாக்களாக மாறிவரும் திருமணங்கள்


ஆடம்பர விழாக்களாக மாறிவரும் திருமணங்கள்
x

ஆடம்பர விழாக்களாக மாறி வரும் திருமணங்களால் பெற்றோர் அவதிப்படுகின்றனர். இது காலத்தின் கட்டாயமா? என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேனி

மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் விதமாகவும், உறவுகளைப் புதுப்பிக்கும் நிகழ்வாகவுமே திருமணங்கள் இத்தனை காலமும் நடந்து வந்தன.

அளவான விருந்தினர்கள், அசத்தலான ஏற்பாடுகள், நடுவீட்டில் பந்தி வைத்து, ஓடி ஓடி உபசரிக்கும் உறவுகள் என கல்யாணங்களில் சந்தோஷம் பொங்கி வழிந்த நாட்கள் உண்டு.

மண்டபமே தீர்மானிக்கிறது

கிராமங்களில் வீடுகளிலேயே திருமணத்தை நடத்தி முடித்து விடுவார்கள். அந்தளவுக்கு கிராமங்களிலும் சரி, அவர்களது மனங்களிலும் சரி இடவசதி இருக்கும். ஆனால் நகரங்களில் அப்படி அல்ல.

திருமணங்களை மண்டபங்களில் நடத்தவேண்டிய சூழல்தான் இருக்கிறது. முகூர்த்த நாட்களில் திருமண மண்டபங்கள் கிடைப்பதே அரிதாகிவிடும். சில நேரங்களில் மண்டபங்கள் காலியாக உள்ள நாட்களில் திருமணத்தை வைத்துக்கொண்டால் என்ன? என்று யோசிப்போரும் உண்டு.

முகூர்த்தத் தேதியைக்கூட இங்கே மண்டபங்களே தீர்மானிக்கின்றன.

திருமண 'பேக்கேஜ்'

முன்பெல்லாம் ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்து உறவினர்கள் உதவியோடு செய்த நிலைமாறி, இப்போது 'பேக்கேஜ்' என்ற அடிப்படையில் திருமண நிகழ்வுகளை நடத்தும் கட்டாயத்திற்கு வந்து இருக்கிறோம்.

அதை நடத்திக்கொடுக்கவும் ஏஜென்சிகள் முளைத்து இருக்கின்றன. 'கையில காசு... வாயில தோசை..' கதைதான்.

ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து அழைத்தது, அழைப்பிதழ் கொடுத்தது எல்லாம் மாறி, 'வாட்ஸ்-அப்'பில் அழைப்பிதழ் அனுப்புவது, 'ஜிபே', 'போன்பே' வழியாக மொய் எழுதுவது போன்ற எந்திரத்தனமான கலாசாரத்தை நாம் கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டோம்.

விழிபிதுங்கும் பெற்றோர்

திருமணங்களை பலர் தங்களது செல்வாக்கைப் பறைசாற்றும் ஆடம்பரத் திருவிழாக்களாகவே இப்போது நடத்தி வருகின்றனர்.

திருமண மண்டபத்தை 'புக்' செய்வது முதல், வரவேற்பு, டெக்கரேஷன், மேக்கப், ஆடல்-பாடல், போட்டோ- வீடியோ, சாப்பாடு என ஒவ்வொன்றிலும் ஆடம்பரம் புகுந்துவிட்டது.

ஆனால் நடுத்தர மக்களுக்கு திருமணம் ஒரு மிகப்பெரிய வேள்வியாகவே இருக்கிறது.

காதல் திருமணமாக இருந்தாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, திருமண செலவுகளால் பெற்றோர் விழிபிதுங்கி போகிறார்கள்.

அப்படி திருமண நிகழ்வுகளில் ஆடம்பரம் தலைதூக்க என்ன காரணம்? என்னென்ன செலவுகள் அதிகரித்திருக்கிறது? என்று சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

ஆடம்பரமாக பார்க்கக் கூடாது

செல்வராணி (இல்லத்தரசி, கம்பம்):- திருமணத்தில் அலங்காரம், புகைப்படம், வீடியோ எடுத்தல் மற்றும் உறவினர்களுக்கு விருந்து அளித்து உபசரிப்பது என்பது தவிர்க்க முடியாதது. மணமக்களுக்கும், இருவீட்டாருக்கும் மட்டுமின்றி உறவினர்கள், நண்பர்கள் பலருக்கும் திருமணம் என்பது பல்வேறு மகிழ்வான நினைவுகளை கொடுக்கக்கூடியது. 1988-ல் எங்களது திருமணம், திருமண மண்டபத்தில் நடந்தது. மண மேடையில் மாலை மாற்றும் போது மேலிருந்து மலர் தூவுவது போன்று அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அப்போது வீடியோ எடுப்பது என்பது அரிதானது. அப்போதே திருமண வீடியோ, புகைப்படங்கள் எடுத்தோம். அதை விட, சிறப்பாக பிள்ளைகளின் திருமணத்தை நடத்த ஆசைப்பட்டு நடத்தினோம். திருமண விருந்தில் பல்வேறு பதார்த்தங்கள் இடம் பெறும்போது, அது செல்வந்தர்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம். ஆனால், திருமணத்துக்கு வரும் அடித்தட்டு மக்களுக்கு அது மிகப்பெரும் விருந்தாக இருக்கும். திருமண விழாக்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப செய்யும் செலவுகளை ஆடம்பரம் என்று பார்க்கக்கூடாது. அதே நேரத்தில் அடுத்தவரை பார்த்து, தகுதிக்கு மீறி கடன் வாங்கி செலவு செய்வது தேவையற்றது.

கவுசல்யா (நகைக்கடை ஊழியர், கண்டமனூர்):- எனக்கு திருமணம் செய்ய வீட்டில் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கியமான நிகழ்வு. திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். திருமணத்துக்கு உறவினர்கள், நண்பர்கள் வருவார்கள். அவர்களை மகிழ்விக்கும் வகையில் விருந்து உபசரிப்பு இருக்க வேண்டும் என்பதால் அதற்காக செலவு செய்வது ஆடம்பரமாக பார்க்கப்படுகிறது. தங்கம் மற்றும் விலைவாசி உயர்வு போன்றவை திருமண செலவுகளை அதிகரிக்கிறது. முன்பு வீடுகளில் திருமணம் செய்தார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. திருமண மண்டபத்தை முன்பதிவு செய்து விட்டு திருமணத்துக்கு தேதி குறிக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

விரலுக்கு ஏற்ற வீக்கம்

சக்திதாசன் (முடிதிருத்தும் தொழிலாளி, தேனி):- திருமணத்தில் அத்தியாவசிய செலவு, ஆடம்பர செலவு என இரண்டாக பிரித்து விடலாம். பட்டாசு, பேனர், அதிகப்படியான மண்டப அலங்காரம், உணவில் அதிக எண்ணிக்கையில் பதார்த்தங்கள் போன்றவை ஆடம்பரம். அதை குறைத்துக் கொள்வது நல்லது. கடந்த மாதம் எனக்கு திருமணம் நடந்தது. அதில் தேவையற்ற ஆடம்பரத்தை தவிர்த்தோம். விரலுக்கு ஏற்ற வீக்கம் வேண்டும் என்பார்கள். செல்வந்தர்கள் ஆடம்பரமாக செலவு செய்வதை பார்த்து, நடுத்தர மக்களும் தங்களின் சக்திக்கு அதிகமாக செலவு செய்வதால் கடனாளியாகின்றனர். அந்த கடனை அடைக்கவே சில ஆண்டுகள் கஷ்டப்பட வேண்டியது உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மக்களின் கருத்து

மொத்தத்தில் திருமணம் என்பது உறவுகளின் சங்கமமாக இருக்கலாம். அதில் ஆடம்பரம் தேவையில்லை, அன்பு மிகுதியாக இருந்தால் போதும் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது.


Next Story