சவுதிஅரேபியாவில்இறந்தடிரைவரின் உடலை முள்ளக்காடு கொண்டு வர மனைவி கோரிக்கை


தினத்தந்தி 26 Dec 2022 6:45 PM GMT (Updated: 26 Dec 2022 6:47 PM GMT)

சவுதிஅரேபியாவில் இறந்த முள்ளக்காடு டிரைவரின் உடலை ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது மனைவி பொதுமக்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி

சவுதிஅரேபியாவில் இறந்த முள்ளக்காடு டிரைவரின் உடலை ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது மனைவி பொதுமக்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

சவுதி அரேபியாவில் சாவு

தூத்துக்குடி அருகிலுள்ள முள்ளக்காடு சாமி நகரைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ். டிரைவர். இவர் சவுதிஅரேபியாவில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜெயமாரி முள்ளக்காட்டிலுள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்தோணிராஜ் இறந்துவிட்டதாக மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் வந்துள்ளது. ஆனால் அவரது உடலை அனுப்பி வைப்பது குறித்து எந்த தகவலும் சம்மந்தப்பட்ட சவுதிஅரேபியா நிறுவனத்திடம் இருந்து வரவில்லை.

மனைவி கோரிக்கை

இதனால் மனமுடைந்த அவரது மனைவி ஜெயமாரி முள்ளக்காடு பொதுமக்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவர் கொடுத்த மனுவில், எனது கணவர் அந்தோணி ராஜ். இவர் கடந்த 6 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 16-ந் தேதி சவுதி அரேபியாவில் திடீரென இறந்து விட்டதாக தகவல் வந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கேட்டபோது, அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை. ஆகையால் எனது கணவரின் உடலை ஊருக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

காற்றாலை

இதேபோன்று ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் சண்முகத்தாய் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ஓட்டப்பிடாரம் யூனியனுக்கு உட்பட்ட முள்ளூர் கிராமத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் சார்பில் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிக்கு காற்றாலை நிறுவன ஊழியர்கள் எந்தவித அனுமதியும் இன்றி பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட குளத்தின் கரையை உடைத்து வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். நீர்ப் பிடிப்பு பகுதியிலும் எந்தவித அனுமதியும் இன்றி காற்றாலைக்கு சொந்தமான மின்கம்பங்களை நட்டி உள்ளனர். ஆகையால் குளக்கரையை சரி செய்து தரவும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அமைக்கப்பட்ட மின்கம்பங்களை அகற்றவும், கனரக வாகனங்கள் சென்றதால் சேதப்படுத்தப்பட்ட சாலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.


Next Story