சாலை விபத்தில் தமிழ்நாடு முதலிடம் என்ற கரும்புள்ளி மறையுமா?


சாலை விபத்தில் தமிழ்நாடு முதலிடம் என்ற கரும்புள்ளி மறையுமா?
x
தினத்தந்தி 22 Oct 2022 7:30 PM GMT (Updated: 22 Oct 2022 9:42 PM GMT)

சாலை விபத்தில் தமிழ்நாடு முதலிடம் என்ற கரும்புள்ளி மறையுமா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர்

பெருகும் வாகனங்கள்... அதிகரிக்கும் விபத்துகள்

நாட்டில் பெருகி வரும் வாகன போக்குவரத்துக்கு ஏற்ப சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காமல் அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டி செல்வது விபத்துகளுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பது போன்று அமைகிறது. சாலை விபத்துகளால் விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பறிபோய் வருகிறது. உடல் உறுப்புகளை இழந்து பலர் பரிதவிக்கும் நிலையும் ஏற்படுகிறது.

இந்த நிலையில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அபராத தொகையை பல மடங்கு அதிகரித்து மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை ரூ.500 முதல் ரூ.1 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் கே.பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார்.

அபராத தொகை உயர்வு

தற்போது மோட்டார் சைக்கிளில் 'ஹெல்மெட்' அணியாமல் சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகை 10 மடங்கு அதிகரித்து ரூ.1,000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று காரில் 'சீட்' பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.1,000, செல்போனில் பேசியபடி வாகனத்தை ஓட்டிச்சென்றால் ரூ.1,000, இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு ரூ.2,000, நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தினால் ரூ.500 என்று அபராத தொகை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மதுபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு மட்டும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வரும் வேளையில் பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களுக்கும் அபராதம், ஆம்புலன்சுகளுக்கு வழி விடாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் என புதிய நடைமுறையும் கொண்டு வரப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளை கதிகலங்க வைத்துள்ள இந்த புதிய அபராத நடைமுறை விரைவில் அமலுக்கு வர இருக்கிறது. தற்போது புதிய அபராத தொகையை 'இ-சலான்' கருவியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள அபராதத்தால் வாகன விபத்துகள் குறையுமா? இந்தியாவிலேயே சாலை விபத்தில் தமிழ்நாடு முதலிடம் என்ற கரும்புள்ளி மறையுமா? என்பது பற்றிய மக்கள் பார்வை வருமாறு:-

சாலைகளையும் சீரமைக்க வேண்டும்

பூலாம்பாடியை சேர்ந்த அரசு வாகன டிரைவர் சடையன்:-

போக்குவரத்து வீதியை மீறுவோருக்கான அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இனிமேல் பெரும்பாலானோர் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன். இதனால் சாலை விபத்துகள் குறைய வாய்ப்புள்ளது. மேலும் மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளாலும் விபத்துகள் அரங்கேறி வருகிறது. அதனையும் அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.

எளம்பலூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன்:- அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளதால் விபத்து குறையாது. அபராத தொகை விதிக்கும்போது போலீசாருக்கும், வாகன ஓட்டிகளும் இடைய வாக்குவாதம்தான் ஏற்படும். அனைவரும் வாகனத்தை சரியாக ஓட்டினாலே விபத்து ஏற்படாது. சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அனைவரும் கடைபிடிக்க தொடங்கி விடுவார்கள்.

அரசே ஹெல்மெட் வழங்க வேண்டும்

பெரம்பலூரை சேர்ந்த சுபாலெட்சுமி:- தற்போது பெரும்பாலான பெண்கள் வேலைக்கு ஸ்கூட்டரில் சென்று வருகின்றனர். அவர்களில் சிலர்தான் ஹெல்மெட் அணிகின்றனர். ஹெல்மெட் அணிந்தால் தலை அலங்காரம் கலைந்து விடும் என்கிறார்கள். ஹெல்மெட்டை கழற்றும்போது கூட மீண்டும் தலைமுடியை அலங்காரம் செய்து கொள்ளலாம். விபத்தில் உயிர் போனால் மீண்டும் திரும்ப வராது. தற்போது அரசு இலவசம் என்ற பெயரில் எதை, எதையோ கொடுக்கிறது. அதில் முக்கியமானதாக குடும்ப அட்டைதாரருக்கு ஹெல்மெட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதை குறைக்க வேண்டும். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகை விதிக்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது.

பெரம்பலூர் முத்துநகரை சேர்ந்த ஷேர் ஆட்டோ டிரைவர் ரெங்கநாதன்:- கொரோனா கால கட்டத்துக்கு பின்னர் கடன், வட்டி, மாத தவணை என பண நெருக்கடி சுமையில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை பல மடங்கு அதிகரித்திருப்பது நிச்சயம் மேலும் சுமையாகத்தான் இருக்கும். எனவே தமிழகத்தில் மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தக்கூடாது. அதனை திரும்பப்பெற வேண்டும். பழைய சட்டத்தை பின்பற்ற வேண்டும். போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் பணத்தை கறப்பதற்கு பதிலாக அவர்களை 1 மணி நேரம் சிக்னலில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சொல்லலாம். போக்குவரத்து விதிகளை, சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்பது குறித்து கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த செய்யலாம்.

வேப்பந்தட்டையை சேர்ந்த வினோத்:- போக்குவரத்து விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதே சமயத்தில் அதிக அளவில் அபராத தொகை விதித்திருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போக்குவரத்து விதிமுறைகளை போலீசார் தவறாக பயன்படுத்தாமல், முறையாக பயன்படுத்தி அபராத தொகையை முறையாக வசூல் செய்ய வேண்டும். இதனால் வாகன ஓட்டிகள் ஒருமுறை அபராதம் கட்டினால், மறுமுறை அபராதம் கட்டாதவாறு தங்களை திருத்திக்கொள்ள உதவும்.


Next Story