குளிர் அதிகரிக்குமா...? - வானிலை ஆய்வு மையம் மறுப்பு!


குளிர் அதிகரிக்குமா...? - வானிலை ஆய்வு மையம் மறுப்பு!
x
தினத்தந்தி 7 July 2022 7:46 AM GMT (Updated: 7 July 2022 7:51 AM GMT)

கடுமையான குளிர் அலை வீச வாய்ப்பு உள்ளது என்று எந்த அறிவிப்பும் வழங்கவில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை,

கடந்த சில நாட்களாக பூமிக்கும் சூரியனுக்கும் இடையே தூரம் அதிகமாவதால் குளிர் அதிகரிக்கும் எனவும் இதனால் உடல் வலி, காய்ச்சல், சுவாசக் கோளாறு போன்ற உடல் உபாதைகளும் ஏற்படும் எனவும் தகவல்கள் பரவுகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் கடுமையான குளிர் அலை வீச வாய்ப்பு உள்ளது என்று எந்த அறிவிப்பும் வழங்கவில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்கள்

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் டுவிட்டர் பக்கத்தில், "சூரியனில் இருந்து தொலை தூர நிலைக்கு பூமி செல்லும் நிகழ்வு காரணமாக தமிழகத்தில் குளிர் அலை வீச வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இது போன்ற எந்த அறிவிப்பையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வழங்கவில்லை" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அப்ஹீலியன்

சூரியனைச் சுற்றி வரும் கோள்கள் அதனுடைய வட்டப்பாதையில் எப்போது சூரியனிடமிருந்து தூரமாக இருக்கிறதோ அந்நிகழ்வுக்குப் பெயர் அப்ஹீலியன். எந்த நேரத்தில் மிக அருகில் இருக்கிறதோ அதற்குப் பெயர் பெரிஹீலியன். கிரேக்க மொழியில் 'அபோ' என்றால் தூரம். 'பெரி' என்றால் அருகாமை.

அதே போல் பூமி அதனுடைய சுற்றுப்பாதையில் சூரியனிடமிருந்து மிக அதிகமான தூரத்தில் இருக்கும்போது அதை அப்ஹீலியன் என அறிவியலாளர்கள் அழைக்கின்றனர்.

பெரிஹீலியன்

பொதுவாக இந்த அப்ஹீலியன் நிகழ்வு ஜூலை மாதத்தில் நடக்கும். இந்த காலகட்டத்தில் சூரியனிடமிருந்து பூமி கிட்டத்தட்ட 152 மில்லியன் (15.2 கோடி) கிமீ தூரத்தில் இருக்கும்.

அதே போல் பூமி சூரியனுக்கு மிக அருகாமையில் அதாவது 147மில்லியன்(14.7 கோடி) கிமீ தூரத்தில் இருக்கும்போது அதற்குப் பெயர் பெரிஹீலியன். இது ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் நிகழும். பூமியின் சுற்றுப்பாதை வட்டமாக இல்லாமல் கோழி முட்டைப் போல் நீள்வட்ட வடிவில் இருப்பதனால் இது ஏற்படுகிறது.


Next Story