பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை


பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
x

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம் சேவியர் காலனி பகுதியை சேர்ந்தவர் பெஞ்சமின் மகன் ஜாக்கோப் மெல்கி எத்தேன்(வயது 25). இவர் விழுப்புரத்தில் உள்ள வெல்டிங் பட்டறை ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இவர் விழுப்புரம் பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு படித்து வந்த 16 வயதுடைய மாணவியை கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் ஜாக்கோப் மெல்கி எத்தேன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

10 ஆண்டு சிறை

இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட ஜாக்கோப் மெல்கி எத்தேனிற்கு மாணவியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கடத்திச்சென்ற குற்றத்திற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். ஏக காலம் என்பதால் ஜாக்கோப் மெல்கி எத்தேன் 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜாக்கோப் மெல்கி எத்தேன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலா ஆஜரானார்.


Next Story