கல் குவாரியில் தொழிலாளி தவறி விழுந்து சாவு


கல் குவாரியில் தொழிலாளி தவறி விழுந்து சாவு
x

களம்பூர் அருகே கல் குவாரியில் தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தார்.

திருவண்ணாமலை

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை அடுத்த முள்ளிக்குளம் பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 50), டிரிலிங் எந்திரம் மூலம் கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு முத்துராஜ் என்ற மகனும், ராஜலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் சிவசுப்பிரமணியன், திருவண்ணாமலை மாவட்டம் களம்பூரை அடுத்த கஸ்தம்பாடி பகுதியில் உள்ள கல்குவாரியில் கடந்த 3 மாதமாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் டிரிலிங் போடும் போது சிவசுப்பிரமணியன் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து முத்துலட்சுமி களம்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story