தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்


தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2022 6:45 PM GMT (Updated: 17 Oct 2022 6:46 PM GMT)

வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடி அருகே வாலிநோக்கம் கிராமத்தில் அரசு உப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. உப்பு நிறுவன தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு ஊதிய உயர்வு வழங்குவது நடைமுறையில் இருந்து வந்தது. கடந்த 8 ஆண்டுகளாக புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் பல போராட்டங்களை நடத்தி வந்தனர்.அதிகாரிகள் கோரிக்கை நிறைவேற்றி தருவதாக கால அவகாசம் கேட்டனர். அதிகாரிகளின் கால அவகாசம் முடிந்து உப்பு நிறுவன தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வாய்ப்பில்லை என்று எழுத்துப்பூர்வமான அறிவிப்பை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கண்டித்து நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் உப்பு நிறுவன தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவன அலுவலகத்தின் முன்பு அரசு உப்பு நிறுவன சங்க தலைவர் பச்சமால் தலைமையில் பொதுச் செயலாளர் குமாரவடிவேல், பொருளாளர் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் காட்டு ராஜா, தனி ராமு, முருகவேல், குழந்தைவேலு ஆகியோர் முன்னிலையில் தொழிலாளர்களின் ஊதிய உயர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும் மேலாண்மை இயக்குனர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். செயற்குழு உறுப்பினர் சாமி அடியான் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உப்பு நிறுவன தொழிலாளர்கள் பங்கேற்றனர். தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கும் வரை உப்பு நிறுவனத்தில் வேலை புறக்கணிப்பில் ஈடுபட போவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story