இளம் வக்கீல்கள் ஆங்கிலத்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் -நீதிபதி அறிவுரை


இளம் வக்கீல்கள் ஆங்கிலத்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் -நீதிபதி அறிவுரை
x

இளம் வக்கீல்கள் ஆங்கிலத்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஓய்வுபெறும் நாளில் ஐகோர்ட்டு பொறுப்புத்தலைமை நீதிபதி டி.ராஜா அறிவுரை வழங்கி பேசினார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு பொறுப்புத்தலைமை நீதிபதி டி.ராஜா, நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு ஐகோர்ட்டு சார்பில் வழியனுப்பு விழா ஐகோர்ட்டில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், பொறுப்புத்தலைமை நீதிபதியை, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் வாழ்த்தி பேசியதாவது:-

2009-ம் ஆண்டு கூடுதல் நீதிபதியாக நீதிபதி டி.ராஜா நியமிக்கப்பட்டார்.

தற்போது இந்தப் பாரம்பரிய ஐகோர்ட்டின் பொறுப்புத்தலைமை நீதிபதியாக ஓய்வு பெறுகிறார்.

மதுபானம் இல்லை

மதுரை அருகே உள்ள அவரது சொந்த ஊரான தென்னூரில் பண்டைத்தமிழ் பொக்கிஷங்களாக தங்கக்கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவரது சொந்தக்கிராமத்தில் எந்தக்கடையிலும் சிகரெட் விற்கப்படுவது இல்லை. கிராமத்தைச்சேர்ந்த யாரும் மது குடிப்பது இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் ஏற்புரையாற்றிய பொறுப்புத்தலைமை நீதிபதி டி.ராஜா பேசியதாவது:-

மதுரையிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தென்னூர் என்ற கிராமத்தில், ஒரு விவசாயி மகனாகப் பிறந்து, தற்போது இந்த பாரம்பரிய ஐகோர்ட்டின் பொறுப்புத்தலைமை நீதிபதியாக ஓய்வு பெறுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

மகிழ்ச்சியுடன் ஓய்வு

என்னுடைய நீதிபதி பணிக்காலம் மிகவும் திருப்தியாக அமைந்தது. ஒரு பணியில் சேரும்போது ஒருநாள் ஓய்வு வரும் என்பது விதியாகும். அந்த வகையில் 14 ஆண்டுகள் ஐகோர்ட்டு நீதிபதியாகவும், 8 மாதங்கள் பொறுப்புத்தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி மகிழ்ச்சியுடன் ஓய்வு பெறுகிறேன்

இளம் வக்கீல்கள் சுப்ரீம்கோர்ட்டு, ஐகோர்ட்டு என்று எங்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதை முழுமையாகவும், சரியாகவும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்கு ஆங்கிலப்புலமை கட்டாயமாக வளர்த்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் வெற்றிகரமான வக்கீலாகத் திகழ முடியும். கோர்ட்டில் நடைபெறுகின்ற வாதங்களை உன்னிப்பாக கவனிக்கவேண்டும். சட்டப்புத்தகங்களை அதிகம் படிக்கவேண்டும். அவ்வாறு செய்தால் இளம் வக்கீல்களுக்கு வெற்றி நிச்சயம். அவர்களுக்கு வானமே எல்லையாக அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

எம்.துரைசாமி

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி பணி ஓய்வுபெற்ற பின், பொறுப்புத்தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எம்.துரைசாமி நியமிக்கப்பட்டார். அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 21-ந்தேதி ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா அதற்கு மறுநாள் செப்டம்பர் 22-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். இவர் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தது. கூட்டுறவு சங்கங்களுக்கு 6 மாதங்களில் தேர்தல் நடத்தவேண்டும். கோவில் நிலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்ட அனுமதியளித்தது. வேங்கைவயல் குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம் அமைத்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக தாழ்வுதள பஸ்கள் கொள்முதல் செய்வது போன்ற பல முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார்.

நீண்டகாலம்

சொந்த மாநிலத்தில் நீண்டகாலம் பொறுப்புத்தலைமை நீதிபதியாக பதவி வகித்த இவரை 2 முறை ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்ய சுப்ரீம்கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் பரிந்துரை செய்தது. ஆனாலும், இவர் 8 மாதங்கள் பொறுப்புத்தலைமை நீதிபதியாக பதவி வகித்து நேற்று ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story