அவலாஞ்சியில் பூஜ்யம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு


அவலாஞ்சியில் பூஜ்யம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 10 Jan 2023 6:45 PM GMT)

ஊட்டியில் உறைபனி தாக்கம் அதிகரித்து உள்ளது. அவலாஞ்சியில் குறைந்தபட்சமாக பூஜ்யம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டியில் உறைபனி தாக்கம் அதிகரித்து உள்ளது. அவலாஞ்சியில் குறைந்தபட்சமாக பூஜ்யம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

உறைபனி தொடக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை பனிக்காலம் நிலவும். ஆரம்பத்தில் நீர்ப்பனி பொழிவு அதிகமாக இருக்கும். இதன் தொடர்ச்சியாக உறைபனி தாக்கம் தொடங்கும். குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் கடும் உறைபனி பொழிவு ஏற்படும். ஆனால், கடந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கியதால் பனிக்காலமும் தாமதமாக கடந்த நவம்பர் 15-ந் தேதி முதல் தொடங்கியது.

இதற்கிடையே ஊட்டியில் மீண்டும் மழை பெய்ததால், பனிப்பொழிவு குறைந்தது. மீண்டும் கடந்த 2 வாரத்திற்கு முன்பு உறைபனி தாக்கம் காணப்பட்டது. இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக ஊட்டியில் உறைபனி தாக்கம் அதிகரித்து வருகிறது. காலை முதல் மாலை வரை நன்றாக வெயிலும், மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை கடுங்குளிரும் நிலவி வருகிறது.

பூஜ்யம் டிகிரி செல்சியஸ்

ஊட்டியில் நேற்று காலையில் அரசு தாவரவியல் பூங்கா புல் மைதானம் வெள்ளை கம்பளம் விரித்தாற் போல் உறைபனி படர்ந்து இருந்தது. பூந்தொட்டிகளில் உறைபனி வெண்மை நிறத்தில் காணப்பட்டது. ஊட்டி ரெயில் நிலையம், குதிரை பந்தய மைதானம், காந்தல் முக்கோணம் மைதானம் உள்ளிட்ட இடங்களில் உறைபனி தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

அதிகாலையில் பச்சை புல்வெளிகளே தெரியாத வகையில் உறைபனி படர்ந்து இருக்கிறது. காலையில் வெயில் வந்த பின்னர், செடிகள், புல்வெளிகளில் இருந்து உறைபனி உருகி விடுகின்றன. இதேபோல் அவலாஞ்சி, தலைகுந்தா, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தபட்சமாக பூஜ்யம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நேற்று பதிவானது. ஊட்டி நகரில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் மீது பனி கொட்டி கிடந்தது. வாகன ஓட்டிகள் உறைபனியை அகற்றி விட்டு, வாகனங்களை இயக்கினர். ஊட்டியில் குறைந்தபட்சமாக 2.8 டிகிரி செல்சியஸ், அதிகபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஊட்டியில் உறைபனி தாக்கம் அதிகரித்து உள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கடுங்குளிரை போக்க பொதுமக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். மேலும் தேயிலை தோட்டங்களில் செடிகள் கருகும் அபாயம் உள்ளது.

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக உறைபனி பொழிவு காணப்படவில்லை. கடந்த சில நாட்களாக நீர்பனி பொழிவு காணப்பட்டது. இந்தநிலையில் நேற்று அதிகாலை கோத்தகிரி பகுதியில் தாழ்வான இடங்களில் உறைபனி பொழிவு ஏற்பட்டது. ரைபிள் ரேஞ்ச், கார்சிலி, ஓரசொலை, பணடியன் பூங்கா உள்ளிட்ட இடங்களில் புல்வெளிகள் மீது வெண்மையை போர்த்தியது போல் பனித்துளிகள் உறைந்து இருந்தன. புல்வெளிகளில் எங்கு பார்த்தாலும் உறைபனி கொட்டி கிடந்தது.

மேலும் திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மீது உறைபனி படர்ந்து இருந்தது. குழந்தைகள் வாகனங்கள் மீது பனி படர்ந்து இருப்பதை கண்டு ஆச்சரியமடைந்து, உறைபனியை கையில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர். பொதுமக்கள் குளிரை தாக்குப்பிடிக்க கம்பளி ஆடைகளை அணிந்து வருகின்றனர். உறைபனி பொழிவால் அனைத்து தரப்பினரும் அவதி அடைந்துள்ளனர்.



Next Story