தி.மு.க. கூட்டணி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-3; மனிதநேய மக்கள் கட்சிக்கு- 2 ; ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகளுடன் பேச்சுவார்த்தை


தி.மு.க. கூட்டணி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-3; மனிதநேய மக்கள் கட்சிக்கு- 2 ; ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகளுடன் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 2 March 2021 1:51 AM GMT (Updated: 2 March 2021 1:51 AM GMT)

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னை, 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது.

வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், அரசியல்கட்சிகள் எல்லாம் இப்போதுதான் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகின்றன.


ஆளுங்கட்சியான அ.தி. மு.க., பா.ம.க.வை கூட்டணியில் இணைத்து கொண்டதுடன், அந்த கட்சிக்கு 23 தொகுதிகளையும் வழங்கியுள்ளது. தொடர்ந்து, பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

எதிர்க்கட்சியான தி.மு.க.வை பொறுத்தவரை, அந்த கூட்டணியில் ஏராளமான கட்சிகள் இருக்கின்றன. முதற்கட்டமாக நேற்று முன்தினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தி.மு.க. நடத்தியது.

முதல் நாளில் முடிவு எட்டப்படாத நிலையில், நேற்று 2-வது நாளாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. நேற்றைய பேச்சுவார்த்தையில்2 கட்சிகளுக்கும் தொகுதிபங்கீடு உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் கேட்டோம். கருணாநிதி காலத்தில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தான் முதலில் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்து போடுவது வழக்கம், வரலாறு. அதை பின்பற்றி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் மு.க.ஸ்டாலின் கையெழுத்து போட்டு, நானும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளேன்.

பல்வேறு சூழ்நிலை காரணமாக எங்களுக்கு 5 தொகுதிகள் தரமுடியவில்லை என்றும், தங்கள் கட்சி (தி.மு.க.) அதிக தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும், கூட்டணியில் கடந்த முறை இல்லாத கட்சிகள் இருப்பதாகவும் கூறினார்கள். நாங்கள் அதனை ஏற்றுக்கொண்டோம். இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி வேட்பாளர்கள் ஏணி சின்னத்தில்தான் போட்டியிடுவார்கள். எங்களுக்கு விருப்ப பட்டியலில் 25 தொகுதிகள் இருக்கின்றன. அதனை கொடுப்போம். அதில் நாங்கள் விரும்பும் தொகுதிகளை எப்போதும் போல் அவர்கள் நிறைவேற்றி கொடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.



மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க. இடம்பெற்று இருக்கின்ற அ.தி.மு.க. கூட்டணி வருகிற தேர்தலில் மிகப்பெரிய அளவுக்கு தோல்வியை தழுவவேண்டும். தி.மு.க. வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரவேண்டும். தி.மு.க. கூட்டணியில் அதிகமான கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

நாட்டு நலனையும், தமிழக நலனையும் எப்போதுமே கவனத்தில் கொண்டு தியாக மனப்பான்மையுடன் இயங்கும் மனிதநேய மக்கள் கட்சி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் வருகிற சட்டமன்ற தேர்தலில் தொகுதி உடன்பாடு செய்திருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடும். எந்த சின்னத்தில் போட்டியிடுவது, எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து அடுத்தகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, இதே தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு கட்சிகளை தொடர்ந்து, ம.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தியது.

சென்னை அண்ணாஅறிவாலயத்தில், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினரை ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, ஆய்வு மைய செயலாளர் செந்தில் அதிபன், உயர்நிலைக் குழு உறுப்பினர் வக்கீல் சின்னப்பா, தேர்தல் பணி செயலாளர் ஆவடி அந்தரி தாஸ் ஆகிய 4 பேர் அடங்கிய குழுவினர் நேற்று சந்தித்தனர்.

மாலை 5 மணிக்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தை இரவு 7 மணி வரை நீடித்தது. ஆனால் முதற்கட்ட கூட்டத்தில் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படவில்லை. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்படி நடந்தது? என்பது குறித்து மல்லை சத்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

ம.தி.மு.க.வின் எண்ணங்களையும், தொகுதிகள் எண்ணிக்கைகளையும் தி.மு.க. குழுவினருடன் அளித்துள்ளோம். அவர்கள் சொன்ன கருத்தை எங்களுடைய பொதுச்செயலாளர் வைகோவிடம் எடுத்துச்சொல்லி அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு செல்வோம். பேச்சுவார்த்தை சுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. ம.தி.மு.க. தனித்த அடையாளத்துடன் தனி சின்னத்தில்தான் போட்டியிடும். நாளை (இன்று) தெளிவான முடிவு வெளி வரும்.

இவ்வாறு அவர் கூறினார். ம.தி.மு.க. தரப்பில் 10 தொகுதிகள் கேட்கப்படுவதாகவும், தி.மு.க. தரப்பில் 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்ய தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ம.தி.மு.க.வுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்தவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனைச்செல்வன், பொருளாளர் முகமது யூசுப் ஆகிய 4 பேர் அடங்கிய குழுவினர் அண்ணா அறிவாலயம் வந்தனர். தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவினரை சந்தித்து இரவு 7 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்தது. ஆனால் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. இது தொடர்பாக தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருப்பத்தை வெளிப்படுத்தினோம். தி.மு.க. தரப்பில் அவர்களது நிலைப்பாட்டை விளக்கினார்கள். மீண்டும் சந்தித்து விரைவாக தொகுதி பங்கீட்டை நிறைவு செய்வோம். எந்த சின்னத்தில் போட்டி, எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமையும். மீண்டும் நாளை (இன்று) பேச்சுவார்த்தை நடக்கிறது. நாளை அல்லது நாளை மறுநாள் நல்ல தகவல் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியும் 10 தொகுதி கேட்டு நிர்ப்பந்தித்ததாகவும், தி.மு.க. தரப்பில் 5 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்றும், அந்த தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என கட்டாயப்படுத்துவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தநிலையில் ம.தி.மு.க., வி.சி.க. குழுவினருடன் இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எற்பட்டு மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story