இந்தியாவுக்கு எதிரான பேச்சு; நேபாள பிரதமருக்கு சொந்த கட்சியினரே எதிர்ப்பு


இந்தியாவுக்கு எதிரான பேச்சு; நேபாள பிரதமருக்கு சொந்த கட்சியினரே  எதிர்ப்பு
x
தினத்தந்தி 1 July 2020 1:25 AM GMT (Updated: 1 July 2020 1:25 AM GMT)

இந்தியாவுக்கு எதிராக பேசியதால் நேபாள பிரதமருக்கு அவரது கட்சியினரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காத்மாண்டு,

இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளம் பல தசாப்தங்களாக இந்தியாவுடன் நெருங்கிய நல்லுறவைக் கொண்டுள்ளது.  ஆனால், சமீபத்தில் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக் உள்ளிட்ட பகுதிகளுக்கு உரிமை கொண்டாடி புதிய வரைபடத்தை  நேபாள அரசு வெளியிட்டது.

தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் கேபி சர்மா ஒலி, இந்தியாவுக்கு எதிராக பேசி வருகிறார். குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருபவர்களே காரணம் என்று கடுமையாக விமர்சித்தார். இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று, தன்னை பதவியில் இருந்து நீக்க இந்திய தூதரகம் சதி செய்வதாகவும் இந்தியாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

ஆனால், கேபி சர்மா ஒலியின் இந்த பேச்சுக்கு, தற்போது அவரது சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. மொத்தம் 44 உறுப்பினர்கள் அடங்கிய இந்தக் கூட்டத்தில், பிரதமர் சர்மா ஒலி பதவி விலக வேண்டும் என்று முன்னால் பிரதமர் புஷ்ப கமால் தகால், மதவ் நேபாள் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர்.

தன்னை பதவியில் இருந்து நீக்க இந்தியா முயற்சிப்பதாக பிரதமர் கூறியது அரசியல் ரீதியாகவோ, ராஜங்க ரீதியாக முறையானது இல்லை என்று  புஷ்ப கமால் பிரசண்டா கூறினார்.   மேலும் சில தலைவர்களும் அவருக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தனர்.  எனினும், அப்போது எந்த ஒரு பதிலையும் கூறாமல் கேபி சர்மா ஒலி அமைதி காத்த வண்ணமே இருந்தார். 

Next Story