தென்கொரியாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா வெற்றிக்கதைக்கு அச்சுறுத்தலா?


தென்கொரியாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா வெற்றிக்கதைக்கு அச்சுறுத்தலா?
x
தினத்தந்தி 11 Jun 2020 11:15 PM GMT (Updated: 11 Jun 2020 7:43 PM GMT)

பிப்ரவரி, மார்ச் மாதங்கள் தென்கொரியாவுக்கு சோதனைக்காலமாக மாறியது.

தென்கொரியாவை உலக நாடுகள் அனைத்தும் அண்ணாந்து பார்த்தது உண்டு.

அதெப்படி இந்த நாடு மட்டும் இவ்வளவு விரைவாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து விடுதலை பெற்றது என்று.

மீண்டும் கொரோனாவின் எழுச்சி...

ஆனால் யார் கண் பட்டதோ என்று சொல்வதுபோலத்தான் இப்போது தென்கொரியாவின் நிலை ஆகி வருகிறது. அங்கு மீண்டும் கொரோனா வைரஸ் எழுச்சி கண்டு விஸ்வரூபம் எடுக்க தொடங்கி இருக்கிறது.

சீனாவில் டிசம்பரில் கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கியது. பிப்ரவரி, மார்ச் மாதங்கள் தென்கொரியாவுக்கு சோதனைக்காலமாக மாறியது.

தினசரி நூற்றுக்கணக்கானோருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதித்தது. பெரும்பாலானவர்களுக்கு தொற்று, அந்த நாட்டின் நான்காவது பெரிய நகரம் என்று சொல்லப்படக்கூடிய 25 லட்சம் பேர் வாழக்கூடிய டேகு தேவாலயத்தில் இருந்துதான் பரவியது.

ஆனால் இப்போதோ கொத்து கொத்தாக தலைநகர் சியோலை சுற்றிலும் கொரோனா பரவல் கலங்க வைக்கிறது. கூபாங் என்றழைக்கப்படுகிற ஆன்லைன் விற்பனை நிறுவனத்தின் சரக்கு கிடங்கில் இருந்து 146 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது.

அங்கு கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை, உடல் நலம் இல்லாத ஊழியர்கள் கூட பணி செய்ய வைக்கப்பட்டுள்ளனர் என தெரிய வந்தது. இரவு விடுதிகள் உள்ளிட்ட கேளிக்கை அமைப்புகள் மூலம் 200 பேருக்கு பரவி இருக்கிறது.

சியோல் அருகே ஒரு தேவாலயத்தில் இருந்து 90 பேருக்கு தொற்று பரவி உள்ளது. ரிச்வே என்ற நிறுவனத்தின் சுகாதார தயாரிப்புகளை வீடு, வீடாக சென்று விற்பனை செய்கிற 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிப்பு நிலவரம்...

தற்போது தென்கொரியாவில் கொரோனா தொற்று 11 ஆயிரத்து 947 பேரை பாதித்திருக்கிறது, 276 பேரை பலி கொண்டிருக்கிறது என்று அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் தகவல் சொல்கிறது.

கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் பெரும்பாலோர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்துள்ளனர்.

மே மாதம் மத்தியில் கொரோனா பாதிப்பு அளவு மிக குறைவான அளவுக்கு சென்றது. ஆனால் இப்போது இந்த வாரம் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,000-ஐ கடந்து இருக்கிறது.

இது தென்கொரியாவின் வெற்றிப்பாதையில் சறுக்கல் என்கிற வகையில் அமைந்து விட்டது.

ஏனென்றால் சில வாரங்களுக்கு முன்னர்தான் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து விடுதலை பெற்றதை கொண்டாடியது, தென்கொரியா. தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது. கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சியுடன் பரவுகிறது. இந்த நாட்டின் 5 கோடியே 10 லட்சம் மக்களின் வாழ்க்கையும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறது.

இரண்டாவது அலை...

கொரோனா வைரசின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் சுகாதாரத்துறையினரின் உரத்த குரலாக எழுந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று புதிதாக 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மே மாத கடைசியில் இருந்து இப்போது தினசரி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஏறுமுகத்தில் செல்ல தொடங்கி இருக்கிறது. பாதிப்புக்கு ஆளாகியுள்ள பலரும் தலைநகர் சியோல் பெருநகர எல்லைக்குள் வாழ்கிறவர்கள். இங்கு பரவல்களை கண்டறிய அதிகாரிகள் போராடுகிறார்கள்.

கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலைகளை தந்துள்ளபோதும், நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, வலுவான கட்டுப்பாடுகளை இதுவரை அதிகாரிகள் எதிர்த்து வந்துள்ளனர். ஆனால் நாடு மற்றொரு கொரோனா வைரஸ் நெருக்கடியில் சிக்க கூடும் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான கொரியா மையங்களின் இயக்குனர் ஜங் யூன் கியோங் உள்ளிட்ட சுகாதார வல்லுனர்களின் கருத்துக்கு அதிகாரிகளின் நிலை முரண்பாடாக தெரிகிறது.

நடவடிக்கை தீவிரம்

ஜங் யூன் கியோங் இதுபற்றி கூறுகையில், “அதிக மக்கள் தொகை கொண்ட பிராந்தியத்தில், மக்கள் தங்கள் செல்பாடுகளை அதிகரித்து, தனி மனித இடைவெளியை குறைத்துக்கொண்டுள்ளதால் சுகாதார அதிகாரிகள் பரவல் தடம் அறிய சிரமப்படுகிறார்கள்” என்கிறார்.

இதையே தேசிய சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் குவான் ஜூன் வூக்கும் வழிமொழிகிறார்.

புதிய கொரோனா தொற்று நோயாளிகளால் ஆஸ்பத்திரி அமைப்பு மூழ்கடிக்கப்பட்டு விடக்கூடாது என்பதால் சுகாதார அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள். ஆஸ்பத்திரி இட வசதி, படுக்கை வசதி போன்ற தகவல்களை பகிர்வது தொடர்பான பயிற்சியில் அவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

தேசிய சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் குவான் ஜூன் வூக், “நாம் இதுவரை செய்தது போல அதிகளவு சுகாதார வசதிகளுக்கு அதிகமாக முதலீடு செய்ய வேண்டியதிருக்கும். ஏன், கொரோனா கூடுதல் எழுச்சி பெற்றால் இன்னும் கூடுதலாக கூட முதலீடு செய்ய நேரிடலாம்” என எச்சரிக்கை உணர்வுடன் பேசுகிறார்.

தென்கொரியா வெற்றி பெற்று மீண்டும் சறுக்குகிறது. கொரோனா எழுச்சியை கட்டுப்படுத்தி மீண்டும் வெற்றிப்படிக்கட்டில் ஏறுமா தென்கொரியா?

Next Story