ஹோப் விண்கலம் யோஷினோபு ராக்கெட் ஏவுதளத்திற்கு எடுத்து செல்லப்பட்டது


ஹோப் விண்கலம் யோஷினோபு ராக்கெட் ஏவுதளத்திற்கு எடுத்து செல்லப்பட்டது
x
தினத்தந்தி 12 July 2020 3:47 AM GMT (Updated: 12 July 2020 3:47 AM GMT)

அமீரகத்தில் தயாரான ஹோப் விண்கலம் எச் 2ஏ ராக்கெட்டின் மூக்கு பகுதியில் பொருத்தப்பட்டு ஜப்பான் நாட்டின் டனகஷிமா தீவில் உள்ள யோஷினோபு ராக்கெட் ஏவுதளத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

துபாய்,

அமீரகத்தில் தயாரான ஹோப் விண்கலம் எச் 2ஏ ராக்கெட்டின் மூக்கு பகுதியில் பொருத்தப்பட்டு ஜப்பான் நாட்டின் டனகஷிமா தீவில் உள்ள யோஷினோபு ராக்கெட் ஏவுதளத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அமீரகத்தில் தயாரான ஹோப் விண்கலம் ஜப்பான் நாட்டின் டனகஷிமா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து வருகிற 15-ந் தேதி செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட உள்ளது. இந்த விண்கலம் எச் 2ஏ ராக்கெட்டில் பொருத்தப்பட்டு யோஷினோபு ராக்கெட் ஏவுதளத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹோப் விண்கலம் ஏவப்படும் ராக்கெட்டான எச் 2ஏ-ல் 3 பாகங்களில் 2 பாகங்களாக லாஞ்சர்கள் உள்ளன. லாஞ்சர்கள் என்பது ராக்கெட்டிற்கு தேவையான எரிபொருள் மற்றும் உந்து சக்தியை தரும் பகுதிகளாகும்.

முதல் அடிப்பாகத்தில் உள்ள அடுக்கில் திரவ எரிபொருளும், அடுத்து மேலே உள்ள 2-வது லாஞ்சரில் திட எரிபொருளும் உள்ளது. இந்த பாகங்கள் குறிப்பிட்ட உயரத்தில் செல்லும்போது விடுவிக்கப்படும். இறுதியாக மூக்கு பாகத்தில் உள்ள விண்கலம் விண்ணில் விடப்படும். அங்கு மடக்கி வைக்கப்பட்டுள்ள சோலார் மின் தகடுகளை விரித்து பூமியின் வட்டப்பாதையில் இருந்து ஹோப் விண்கலம் பறக்க தொடங்கும்.

இந்த எச் 2ஏ ராக்கெட் மொத்தம் 174 அடி உயரம் கொண்டது. இதன் மொத்த எடை 4 லட்சத்து 45 ஆயிரம் கிலோவாகும். இதன் மூக்கு பகுதியில்தான் தற்போது மிகவும் பாதுகாப்பாக ஹோப் விண்கலம் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது, அங்கு லேசான மழை பெய்து கொண்டு இருக்கிறது. இருந்தாலும் வானிலை சற்று தெளிவாக காணப்படுவதால் குறிப்பிட்ட தேதியில் விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது டனகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து யோஷினோபு ஏவுதளத்திற்கு ஹோப் விண்கலத்துடன் கூடிய மூக்கு பகுதி எடுத்து செல்லப்பட்டுள்ளது.

தொடர்ந்து வானிலை மேகமூட்டமாகவும், மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இருந்தாலும் வருகிற 15-ந் தேதி பொதுமக்கள் பார்வையிட ஏவுதளத்தில் இருந்து 3 கி.மீ. தள்ளி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அமீரகத்தில் உள்ளவர்கள் நேரலையில் கண்டுகளிக்க https://www.emiratesmarsmission.ae/live/ என்ற இணையதள முகவரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அமீரக செவ்வாய் கிரக பயணத்திட்ட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


Next Story