இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: டி நடராஜன் விளையாடுவது சந்தேகம்
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 12 ஆம் தேதி தொடங்குகிறது.
அகமதாபாத்,
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழக வீரர் டி நடராஜன், காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடராஜன் தோள் பட்டை மற்றும் முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தன்னுடைய உடற் தகுதியை உறுதி செய்ய பயிற்சியும், காயம் குணமடைவதற்கான மருத்துவ ஆலோசனையும் பெற்று வருகிறார்.
இதேபோல மற்றொரு சுழற்பந்துவீச்சாளரான வருண் சக்கரவரத்தியும் இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அவரும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி சோதனையை மேற்கொள்ள இருக்கிறார்.
முன்னதாக நடைபெற்ற உடற்தகுதி சோதனையில் வருண் சக்கரவர்த்தி தோல்வியடைந்தார். இதனையடுத்து அவருக்கு பதிலாக ராகுல் சஹார் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் வெள்ளிக்கிழமை தொடங்க இருக்கும் நிலையில் அதற்குள் நடராஜனும், வருண் சக்கரவர்த்தியும் காயத்தில் இருந்து மீண்டு அணியில் இடம் பிடிப்பார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
Related Tags :
Next Story