சர்வதேச டி20 கிரிக்கெட்: தொடர்ச்சியாக 4 டக்-அவுட் - மோசமான சாதனை படைத்த பாக். வீரர்...!


சர்வதேச டி20 கிரிக்கெட்: தொடர்ச்சியாக 4 டக்-அவுட் - மோசமான சாதனை படைத்த பாக். வீரர்...!
x

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியக 4 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் வீரர் டக் அவுட் ஆகி உள்ளார்.

ஷார்ஜா,

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் முதல் 2 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்றது.

இந்த தொடரை கைப்பற்றியதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் முறை ஒரு தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றி அசத்தி உள்ளது. இந்த தொடரின் முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான் வீரர் அப்துல்லா ஷபீக் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் 23 ரன் எடுத்தார்.

முதல் இரு போட்டிகளில் டக் அவுட் ஆனதன் மூலம் அவர் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது சர்வதேச டி 20 போட்டிகளில் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் டக் அவுட் ஆகி உள்ளார். மொத்தம் 6 சர்வதேச டி 20 போட்டிகளில் ஆடி உள்ள ஷபீக் அதில் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வேக்கு எதிராக 41 ரன்கள் எடுத்தார்.

அதன் பின்னர் நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டிகளிலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகளிலும் தொடர்ச்சியாக டக் அவுட் ஆகி உள்ளார். அதன் பின்னர் தான் விளையாடிய 6வது ஆட்டத்தில் (நேற்று) 23 ரன் எடுத்தார்.ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணியின் பிரதான வீரர்கள் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story