நிசாங்கா அதிரடி சதம்; ஜிம்பாப்வேயை வீழ்த்தி உலகக்கோப்பைக்கு தகுதிபெற்ற இலங்கை...!
இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு இலங்கை அணி தகுதி பெற்றது.
புலவாயே,
உலககோப்பை தொடரில் கலந்து கொள்ள உள்ள எஞ்சிய இரண்டு அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சூப்பர் சிக்ஸ் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இலங்கை - ஜிம்பாப்வே அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி இலங்கையில் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் கும்பி 0 ரன், எர்வின் 14 ரன், மதாவாரே 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதையடுத்து இணைந்த வில்லியம்ஸ், ராசா இணை அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. இதில் வில்லியம்ஸ் அரைசதம் அடித்தார். இதையடுத்து வில்லியம்ஸ் 56 ரன்னிலும், ராசா 31 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினர்.
இறுதியில் ஜிம்பாப்வே அணி 32.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 165 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் தீக்சனா 4 விக்கெட்டுகளி வீழ்த்தினார். இதையடுத்து 166 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி ஆடியது.
இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக திமுத் கருணாரத்னேவும், பதும் நிசாங்காவும் களம் இரங்கினர். இதில் கருணாரத்னே 30 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து குசல் மெண்டிஸ் நிசாங்காவுடன் ஜோடி சேர்ந்தார்.
இந்த இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டதோடு அணியை வெற்றி பெறச் செய்தது. இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த நிசாங்கா சதம் (101) அடித்து அசத்தினார். குசல் மெண்டிஸ் 25 ரன்கள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு இலங்கை அணி தகுதி பெற்றது.