"என் காலை கிட்டத்தட்ட உடைத்து விட்டீர்கள் " -அக்தர் குறித்த டிவில்லியர்ஸின் பதிவு வைரல்..!


Image Courtesy : ICC / AFP
x
Image Courtesy : ICC / AFP
தினத்தந்தி 29 April 2022 12:07 PM GMT (Updated: 29 April 2022 12:07 PM GMT)

ஷோயிப் அக்தர் குறித்த டிவில்லியர்ஸின் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கேப்டவுன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயிப் அக்தர். 2002- ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது இவர் மணிக்கு 161 கிமீ வேகத்தில் வீசிய பந்து தான் தற்போது வரை சர்வதேச கிரிக்கெட்டில் வேகமான பந்தாகும்.

சச்சின் , பாண்டிங் போன்ற முன்னணி ஜாம்பவான்களுக்கு பந்துவீச்சில் சிம்ம சொப்பனமாக விளங்கியவர். இவர் 161 கிமீ வேகத்தில் பந்துவீசியதன் 20-ஆம் ஆண்டை முன்னிட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் டுவிட்டரில் அந்த நிகழ்வை நினைவு கூர்ந்து பதிவிட்டு இருந்தது.

இதற்கு பதில் டுவீட் செய்த தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் ஷோயிப் அக்தரை குறிப்பிட்டு, "உங்கள் பந்துவீச்சை நினைத்து இப்போதும் தூக்கமில்லாத இரவுகள் உண்டு " என தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த அக்தர், "நீங்களே பல பந்துவீச்சாளர்களுக்கு தூக்கமில்லாத இரவுகளைக் கொடுத்திருக்கிறீர்கள். உங்களுடன் தொடர்புகொள்வதில் எப்போதும் மகிழ்ச்சி" என தெரிவித்தார்.

மீண்டும் அதற்கு பதிலளித்த டிவில்லியர்ஸ், " நல்ல கடந்த காலங்கள். என் இருபது வயதின் தொடக்கத்தில் சூப்பர்ஸ்போர்ட் பூங்காவில் நடைபெற்ற போட்டியில் நீங்கள் வீசிய பந்தின் மூலம் என் காலை கிட்டத்தட்ட உடைத்து விட்டீர்கள் " என தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் இடையிலான இந்த உரையாடல் தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

Next Story