ஹன்சிகாவின் 50-வது படம் - பரபரப்பு நிறைந்த திரில்லர் கதை 'மஹா': 22-ந்தேதி வெளியாகிறது


ஹன்சிகாவின் 50-வது படம் - பரபரப்பு நிறைந்த திரில்லர் கதை மஹா: 22-ந்தேதி வெளியாகிறது
x

மாலிக் ஸ்டிரீம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் வி.மதியழகன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் யு.ஆர்.ஜமீல் டைரக்ட் செய்துள்ள படம், 'மஹா'. இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். ஸ்ரீகாந்த், ரேஷ்மா, சனம் ஷெட்டி, மேகா ஸ்ரீகாந்த், நந்திதா ஜெனிபர், தம்பி ராமையா, மகத், கருணாகரன், சுஜித் சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற 22-ந்தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் மதியழகன், இயக்குனர் ஜமீல் ஆகியோர் கூறியதாவது:-

'மஹா' படம், ஹன்சிகா மோத்வானிக்கு இது 50-வது படமாகும். இந்தப் படம் வெளியாவதற்கு பல சிக்கல்கள் எழுந்தன. இருந்தாலும் தடைகளை கடந்து வருகிற 22-ந்தேதி படம் வெளியாக இருக்கிறது.

குழந்தைகளை கடத்திக் கொள்ளும் சைக்கோ கொலையாளி பற்றிய திரில்லர் கதையாக படம் தயாராகி இருக்கிறது. ஒரு குழந்தையின் தாயாக தனது அனுபவமிக்க நடிப்பால் ஹன்சிகா கலக்கி இருக்கிறார். ஹன்சிகாவுக்கு ஜோடியாக சிம்பு பிரமாதப்படுத்தி இருக்கிறார். இருவரும் ஜோடியாக தோன்றும் காட்சிகள் பார்வையாளர்களை கலகலப்பூட்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த படத்தின் படப்பிடிப்பு பணியில் தொடங்கப்பட்டது. பின்னர் பல்வேறு பிரச்சினைகளால் இந்த படம் கைவிடப்படுவதாக தெரியவந்தது. ஆனாலும் இந்த படத்தின் அழுத்தமான கதையை நம்பி தயாரிப்பாளர்கள் இந்த படத்தை மீண்டும் களத்துக்கு கொண்டு வர தீர்மானித்தனர். அதன் விளைவாகவே மகா படம் தயாராகி திரைக்கு வரவுள்ளது.

காட்சிக்கு காட்சி பரபரப்பு விறுவிறுப்புகளுடன் இந்த படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தை பார்க்கும் பெற்றோருக்கு குழந்தைகளை பத்திரமாக பாதுகாப்பது எப்படி? என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படும். திரில்லர் கதைகளை விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும். நடிகர்-நடிகைகளின் எதார்த்த நடிப்பாலும், சினிமா கலைஞர்களின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பாலும் எதிர்பார்ப்புக்கு அதிகமாகவே இந்த படம் தயாராகி இருக்கிறது.

குறிப்பாக இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையில் மிரட்டி இருக்கிறார். கொலையாளி வரும் காட்சிகளில் தெறிக்க விடப்படும் பின்னணி இசை நிச்சயம் பார்வையாளர்களை பயமுறுத்தும். அவரது இசை இந்த படத்துக்கு மிகப்பெரிய பலம் எனலாம். பல்வேறு தடைகளை கடந்த நிலையில் இந்த படம் 22-ந்தேதி வெளியாகிறது. நிச்சயம் இது தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக பேசப்படும். நடிப்பில் ஹன்சிகாவின் இன்னொரு பரிமாணம் வெளிப்படும். காதல் முறிவுக்குப் பிறகு சிம்புவுடன்-ஹன்சிகா இணைந்து நடித்திருப்பது இந்த படத்துக்கு நான் எதிர்பார்ப்பை மேலும் கூட்டி இருக்கிறது, என படத்தின் தயாரிப்பாளர் மதியழகன், இயக்குனர் ஜமீல் ஆகியோர் தெரிவித்தனர்.