மோசடி செய்து வெளிநாடுகளில் பதுங்கும் தொழில் அதிபர்கள் கதை, ‘இந்தியன்-2’?

இந்தியன்-2 படத்தில் நடிக்கவும் கமல்ஹாசன் தயாராகி உள்ளார்

Update: 2018-02-23 23:15 GMT
தனிக்கட்சி தொடங்கி உள்ள கமல்ஹாசன் கைவசம் உள்ள 3 படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடுகிறார். விஸ்வரூபம்-2 படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. இதன் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும். சபாஷ் நாயுடு படம் பாதியில் நிற்கிறது.

இந்தியன்-2 படத்தில் நடிக்கவும் கமல்ஹாசன் தயாராகி உள்ளார். இயக்குனர் ஷங்கர் கடந்த மாதம் தைவான் நாட்டில் இந்தியன்-2 ஹைட்ரஜன் பலூனை பறக்கவிட்டு பட வேலைகளை ஆரம்பித்தார். கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துள்ளதால் இந்த படத்தில் மக்களை கவரும் புதிய விஷயங்களை சேர்க்கின்றனர். 1996-ல் வெளியான முதல் பாகம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பற்றி பேசியது.

இரண்டாம் பாகத்தில் அரசியல்வாதிகளின் ஊழல் தோலுரிக்கப்படுகிறது. தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஊழல்களை இந்த படத்தில் காட்சி படுத்துகின்றனர். வங்கிகளில் மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் தொழில் அதிபர்கள் பின்னணியையும் கதைக்குள் கொண்டுவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசியலில் கமல்ஹாசனுக்கு மக்கள் ஆதரவை திரட்டும் பிரசார படமாகவும் இது இருக்கும். நான் உங்கள் வீட்டு விளக்கு, ஊழலை அனைவரும் சேர்ந்து ஒழிப்போம். ஆட்சியாளர்கள் ஊழலை ஒழிக்க தவறியதால்தான் நான் களத்தில் இறங்கி உள்ளேன். ஏழ்மையை விரட்டி வேலை வாய்ப்பை ஏற்படுத்துவேன் என்றெல்லாம் சமீபத்திய அரசியல் மேடையில் பேசினார். நான் காகித பூ அல்ல விதை. என்னை விதைத்தால் வளருவேன் என்றும் கூறினார்.

அதை மையப்படுத்தும் கொள்கைகளும், ‘பஞ்ச்’ வசனங்களும் படத்தில் இடம்பெறுகின்றன. இதில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசி வருகின்றனர். இந்தி நடிகர் அஜய்தேவ்கானையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. இதர நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடக்கிறது. ஓரிரு வாரத்தில் படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. படப்பிடிப்பையும் விரைவில் தொடங்க உள்ளனர்.

மேலும் செய்திகள்