போக்குவரத்து நெரிசலால் பட விழாவுக்கு பைக்-கில் வந்த நடிகை சாய்பல்லவி

போக்குவரத்து நெரிசலால் பட விழாவுக்கு நடிகை சாய்பல்லவி ‘பைக்’கில் வந்தார்.

Update: 2018-03-06 23:00 GMT
போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பட விழாவுக்கு  நடிகை சாய்பல்லவி  ‘பைக்’கில் வந்தார்.

மலையாளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படத்தில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சாய்பல்லவி. விஜய் இயக்கிய ‘கரு’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார். இந்த படம் கனம் என்ற பெயரில் தெலுங்கிலும் தயாராகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வர உள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் மற்றும் தனுசின் மாரி இரண்டாம் பாகம் ஆகிய படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். அவர், சக நடிகர்களை மதிப்பது இல்லை என்றும் படப்பிடிப்பில் கெடுபிடியாக நடந்து கொள்கிறார் என்றும் கரு படத்தில் நடித்து இருந்த தெலுங்கு நடிகர் நாகசவுரியா குறை கூறினார்.

அதற்கு சாய்பல்லவி மறுப்பு தெரிவித்தார். படப்பிடிப்பில் ஒழுங்காக கலந்து கொள்கிறேன். என்னை பற்றி யாரும் புகார் கூறியது இல்லை. என் மீது வருத்தம் இருந்தால் படப்பிடிப்பிலேயே நாகசவுரியா சொல்லி இருக்கலாம் என்று பதில் அளித்து இருந்தார். இந்த நிலையில் கரு பட விழாவுக்கு சாய் பல்லவி பைக்கில் சென்ற படம், இணையதளங்களில் பரவி வருகிறது.

தெலுங்கு பதிப்பான கரு பட நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இந்த விழாவுக்கு சாய்பல்லவி பட்டு சேலை உடுத்திக்கொண்டு காரில் புறப்பட்டு சென்றார். ஆனால் வழியில் போக்குவரத்து நெரிசலில் அவரது கார் சிக்கிக் கொண்டது. இதனால் நிகழ்ச்சிக்கு செல்ல தாமதம் ஏற்பட்டது.

உடனே காரில் இருந்து இறங்கி உதவியாளரின் மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார்ந்து நிகழ்ச்சிக்கு சென்றார். அந்த படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்