நெல்லை அருகே கொலை செய்யப்பட்ட லாரி டிரைவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் போலீசார் சமரசம்

நெல்லை அருகே கொலை செய்யப்பட்ட லாரி டிரைவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உடலை ஒப்படைத்தனர்.

Update: 2016-12-15 19:30 GMT
நெல்லை,

நெல்லை அருகே கொலை செய்யப்பட்ட லாரி டிரைவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உடலை ஒப்படைத்தனர்.

லாரி டிரைவர் கொலை

நெல்லை அருகே உள்ள சீவலப்பேரி தோணித்துறை கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மகன் பெருமாள் (வயது 32), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் தோணித்துறையில் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெருமாளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பெருமாளின் அண்ணனுக்கு, அதே ஊரைச் சேர்ந்த சசிகுமார் என்பவருடைய தங்கையை பெண் கேட்டனர். அதற்கு சசிகுமார் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் சசிகுமாருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக பெருமாள் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன்பிறகு பெருமாள் சென்னைக்கு சென்று விட்டார். இதற்கிடையே ஊருக்கு வந்த அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

போராட்டம்

இந்த கொலை தொடர்பாக சசிக்குமார், மாரியப்பன் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே பெருமாளின் உடல் நேற்று பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு பெருமாளின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் ஏற்பாடு நடந்தது.

ஆனால் பெருமாளின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் இல்லை என்றால் உடலை வாங்க மாட்டோம் என்று கூறினார்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு சமாதானம் ஏற்பட்டது. இதையடுத்து பிற்பகலில் பெருமாளின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்