ஈரோட்டில் நடந்த தொழில் முனைவோர் கருத்தரங்கில் 12 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.22 லட்சம் கடன் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வழங்கினார்

ஈரோட்டில் நடந்த தொழில் முனைவோர் கருத்தரங்கில் 12 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.22 லட்சம் கடன் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வழங்கினார்

Update: 2016-12-15 23:00 GMT
ஈரோடு,

ஈரோட்டில் நடந்த தொழில் முனைவோர் கருத்தரங்கில் 12 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.22 லட்சம் கடனை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன் வழங்கினார்.

தொழில் முனைவோர் கருத்தரங்கம்

ஈரோடு மாநகராட்சி தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் பாசம் தொண்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தொழில் முனைவோர் கருத்தரங்கம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கருத்தரங்குக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் டி.பழனிகுமார் தலைமை தாங்கினார்.

ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சீனி அஜ்மல்கான் முன்னிலை வகித்தார். இந்திய அரசு நறுமண பொருட்கள் வாரிய செயல் உறுப்பினர் எஸ்.நல்லகண்ணு குத்துவிளக்கு ஏற்றினார். மாவட்ட நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் சி.ஆர்.அபூர்வர்மா மகளிர் சுய உதவிக்குழு கடன் பற்றியும், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் சி.எம்.ராசுமணி சுயதொழில் கடன் குறித்தும் பேசினார்கள்.

ரூ.22 லட்சம் கடன்

கனரா வங்கி பயிற்சி மையத்தின் முதன்மை மேலாளர் கே.சுதர்சன் தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி அளித்தார்.

மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் எம்.சந்திரசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 12 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.22 லட்சம் கடன் வழங்கி பேசினார்.

கருத்தரங்கில் தாட்கோ மாவட்ட மேலாளர் போஜான், பாசம் தொண்டு நிறுவனத்தின் திட்ட இயக்குனர் எஸ்.மூர்த்தி, வங்கி மேலாளர்கள் மற்றும் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 80 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். முன்னதாக பாசம் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் கவுரி வரவேற்று பேசினார். முடிவில் திட்ட அலுவலர் கார்த்திகா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்