ஆத்தூர் அருகே மூதாட்டியிடம் 7½ பவுன் நகை அபேஸ் கசாயம் கொடுத்து மயக்கமடைய செய்த மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு

ஆத்தூர் அருகே கசாயம் கொடுத்து மயக்கமடைய செய்து மூதாட்டியிடம் 7½ பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம மனிதரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மயங்கி விழுந்தனர் ஆத்தூர் அருகே உள்ள கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(வயது70). தபால் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்

Update: 2016-12-31 22:15 GMT

ஆத்தூர்,

ஆத்தூர் அருகே கசாயம் கொடுத்து மயக்கமடைய செய்து மூதாட்டியிடம் 7½ பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம மனிதரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மயங்கி விழுந்தனர்

ஆத்தூர் அருகே உள்ள கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(வயது70). தபால் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி தனபாக்கியம்(65) பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இவர்கள் வசித்து வந்த வீடு அருகே மேலும் 2 வீடுகள் சொந்தமாக உள்ளது.

நேற்று முன்தினம் மாலை இவர்கள் வீட்டுக்கு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வந்தார். அவர் சரவணனிடம் தான் ஒரு அரசு அலுவலர் என்றும், வாடகைக்கு வீடு வேண்டும் என்றும் கூறினார். மேலும் தன்னிடம் நோய் எதிர்ப்பு சக்திக்கு சித்த மருந்து உள்ளதாக கூறிய அந்த மர்ம நபர், ஒரு மருந்தை கொண்டு வந்து சரவணன் வீட்டில் கசாயம் தயாரித்து தம்பதியினருக்கு கொடுத்தார். இதை நம்பிய சரவணனும், தனபாக்கியமும் அந்த கசாயத்தை குடித்தனர். இதையடுத்து அவர்கள் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர்.

நகை அபேஸ்

பின்னர் 2 மணி நேரம் கழித்து சரவணனும், தனபாக்கியமும் மயக்கம் தெளிந்து பார்த்தனர். அப்போது தனபாக்கியம் கழுத்தில் அணிந்து இருந்த 7½ பவுன் நகையை காணவில்லை. கசாயம் கொடுத்து மயக்கமடைய செய்து அந்த மர்ம ஆசாமி தனபாக்கியத்திடம் நகையை அபேஸ் செய்து இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும்.

இதுகுறித்து மல்லியகரை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் 7½ பவுன் நகையை அபேஸ் செய்த மர்மஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்