செங்குன்றத்தில் லாரி மோதி ஓட்டல் ஊழியர் பலி

செங்குன்றத்தில் லாரி மோதி ஓட்டல் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-02-17 19:33 GMT
செங்குன்றம்,

செங்குன்றத்தில் லாரி மோதி ஓட்டல் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

ஓட்டல் ஊழியர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா மாந்தங்குடிபட்டி அடுத்த கருக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலு (வயது 33). இவர், செங்குன்றம் பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார்.

நேற்று காலை இவர், செங்குன்றம் பைபாஸ் சாலை அருகே உள்ள சர்வீஸ் சாலையில் வடகரையில் இருந்து பாலவாயல் நோக்கி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

லாரி மோதி பலி

அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வடிவேலு, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள், வடிவேலு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து நடந்த உடன் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார். 

மேலும் செய்திகள்