விவசாயிகளுக்கு உடனே வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு உடனே வறட்சி நிவாரணம் வழங்கவேண்டும் என்று தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2017-02-27 22:45 GMT
திருவிடைமருதூர்,

செயல்வீரர்கள் கூட்டம்

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் திருவிடைமருதூர் கலைஞர் பாசறையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவர் சிங்கை சிவா தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் சி.அம்பிகாபதி, பொதுக்குழு உறுப்பினர் சுந்தரஜெயபால், பேரூர் செயலாளர் கோ.சி.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றிய செயலாளர் செ.ராமலிங்கம் வரவேற்றார். தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சு.கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு தி.மு.க. உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

வறட்சி நிவாரணம்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒன்றியம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்று கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது. வறட்சி நிவாரணத்தை விவசாயிகளுக்கு உடனே வழங்க தமிழக அரசை கேட்டுக் கொள்வது. உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றிபெற பாடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜி.கே.எம்.ராஜா, மாவட்ட துணை செயலாளர் ரோஸ்லின் மேரி கிறிஸ் டோபர், பேரூர் செயலாளர் எஸ்.கே.பஞ்சநாதன், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் எஸ்.மணிமாறன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பி.முனியசாமி உள்பட திரளான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்