வீடு புகுந்து செல்போன்கள், பணம் திருடிய என்ஜினீயரிங் கல்லூரி மாணவரை மடக்கிப்பிடித்த பெண்

வீடு புகுந்து செல்போன்கள், பணம் திருடிய என்ஜினீயரிங்

Update: 2017-03-21 23:03 GMT
தாம்பரம்,

மடக்கிப்பிடித்தார்

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் ஜோதிமணி(23). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது வீட்டுக்குள் நைசாக புகுந்த வாலிபர் ஒருவர் அங்கு இருந்த செல்போன்கள் மற்றும் ரூ.2,700 ஆகியவற்றை திருடி விட்டு தப்பிச் செல்ல முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜோதிமணி சுதாரித்துக்கொண்டு தப்ப முயன்ற அந்த வாலிபரை மடக்கிப்பிடித்தார்.

என்ஜினீயரிங் மாணவர்

மேலும், இதுபற்றி தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது அவர் அதே பகுதியை சேர்ந்த பாலாஜி(19) என்பதும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து பாலாஜியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 4 செல்போன்கள் மற்றும் ரூ.2,700-ஐ பறிமுதல் செய்தனர்.

எந்திரங்கள் திருட்டு

* செங்குன்றத்தை அடுத்த பழைய அலமாதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
* செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கத்தில் தாமோதரன் என்பவருக்கு சொந்தமான கிரில் கேட் செய்யும் கடையில் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வெல்டிங், கட்டிங் மற்றும் டிரில்லிங் எந்திரங்களை திருடிய செங்குன்றத்தை சேர்ந்த பாபு(28), ராஜூ(29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
* கணவர் குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டதால் மாதவரம் பொன்னியம்மன்மேட்டை சேர்ந்த இந்துமதி (27) தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

ரெயில் நிலையத்தில் தற்கொலை

* மாதவரம் பால்பண்ணையில் ரத்னகுமார்(47) வீட்டின் முன் நிறுத்தியிருந்த அவரது மோட்டார்சைக்கிளை திருடிய மணலியை சேர்ந்த கார்த்திக் (21), மாத்தூர் எம்.எம்.டி.ஏ.வை சேர்ந்த தண்டபாணி(20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நகைக்கடை நடத்தி வந்தவர் லலித்(42). சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

* தரமணி பறக்கும் ரெயில் நிலைய நடைமேடை அருகே உள்ள படிக்கட்டு பகுதியில் 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றி ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* சூளைமேடு வ.உ.சி. தெருவை சேர்ந்த டெய்லர் பாலன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

மேலும் செய்திகள்