சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு ரூ.55 லட்சம் வெளிநாட்டு பணம் கடத்த முயற்சி 3 பேர் கைது

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.55 லட்சம் வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-03-21 23:11 GMT

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் செல்ல இருந்தது. இந்த விமானத்தில் வெளிநாட்டு பணம் கடத்த இருப்பதாக சுங்க இலாகா பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து விமானத்தில் ஏற வந்த பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சிங்கப்பூருக்கு சுற்றுலா விசாவில் செல்ல சென்னையை சேர்ந்த அப்துல் சலாம் (வயது 30), அப்துல் ரசாக் (35) ஆகியோர் வந்திருந்தனர்.

பணம் பறிமுதல்

சந்தேகத்தின் பேரில் அவர்களை சுங்க இலாகா அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்கள் கொண்டு வந்த பெட்டிகளை சோதனை செய்தனர்.

அதில் முறுக்கு, மிக்சர் பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் அமெரிக்க மற்றும் யூரோ டாலர்கள் இருந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து 2 பேரிடமும் இருந்த ரூ.37 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

3 பேர் கைது

இதே போல் சிங்கப்பூருக்கு செல்ல இருந்த மற்றொரு விமானத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த காதர்பாஷா (39) ஏற வந்தார். அவருடைய பெட்டியை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் துணிகளுக்கு இடையே மறைத்து வைத்திருந்த ரூ.18 லட்சம் மதிப்புள்ள அரபு நாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு வெளிநாட்டு பணம் கடத்த முயன்ற 3 பேரின் விமான பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர். மேலும் 3 பேரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்