ஊதியம் வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

ஊதியம் வழங்கக்கோரி தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2017-03-30 23:30 GMT

தாராபுரம்,

தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 16 ஊராட்சிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். மாம்பாடி ஊராட்சியில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 300–க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 5 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய தொகையை உடனே வழங்க வேண்டும் என்று கேட்டு, மாம்பாடி ஊராட்சி பகுதியில் உள்ள நூறுநாள் வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் தாராபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இது குறித்து முற்றுகையில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறியதாவது “ஊரக வேலை வாய்ப்பு நூறு நாள் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு சரிவர ஊதியம் வழங்குவதில்லை. மாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட குருநாதன்கோட்டை, அக்கரைபாளையம், புளியம்பட்டி, குமாரசாமி கோட்டை, மாம்பாடி ஆகிய கிராமங்களில் 300–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த திட்டத்தில் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு கடந்த 5 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை.

இந்த திட்டத்தில் ஆதரவற்ற பெண்கள் நிறைய பேர் வேலை செய்கிறார்கள். இவர்கள் இந்த ஊதியத்தை நம்பித்தான் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். 5 மாதமாக ஊதியம் வழங்காததால், சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தவிக்கிறார்கள். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை ஊதியம் கேட்டு மனு கொடுத்துள்ளோம். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்று கேட்டு, தொழிலாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டோம்“ என்று கூறினர். இது குறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்