திருப்பூரில் பாறைக்குழி தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு

திருப்பூரில் பாறைக்குழியில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

Update: 2017-04-01 22:30 GMT

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் கொங்குமெயின் ரோடு எம்.எஸ்.நகரை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவருடைய மகன் சந்தோஷ் (வயது 14). இவன் நெசவாளர் காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் சந்தோஷ் தனது நண்பர்களுடன் பூலுவப்பட்டியில் உள்ள பாறைக்குழியில் தேங்கி நிற்கும் உள்ள தண்ணீரில் குளிக்க சென்றான்.

அப்போது நண்பர்களுடன் தண்ணீரில் இறங்கி குளித்து கொண்டிருந்த போது சந்தோஷ் ஆழமான பகுதிக்கு சென்றான். நீச்சல் தெரியாததால் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினான். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவனுடைய நண்பர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சல் போட்டனர்.

பரிதாப சாவு

ஆனால் சிறிது நேரத்திலேயே சந்தோஷ் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையம் மற்றும் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் சந்தோசை பிணமாக மீட்டனர். பின்னர் அனுப்பர்பாளையம் போலீசார் சந்தோசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சந்தோசின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்