தண்டவாளத்தில் தவறி விழுந்த பெயிண்டர், கால்கள் துண்டாகி பலி

அண்ணனூர் ரெயில் நிலையத்தில் ரெயில் தண்டவாளத்துக்கும், நடைமேடைக்கும் நடுவில் சிக்கி தண்டவாளத்தில் தவறி விழுந்த பெயிண்டர், கால்கள் துண்டாகி பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-04-23 23:30 GMT

ஆவடி

ஆவடியை அடுத்த பட்டாபிராம் கக்கன்ஜி நகர், காந்தியடிகள் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா(வயது 36). பெயிண்டர். சம்பவத்தன்று இவர், மின்சார ரெயிலில் சென்னை செல்வதற்காக ஆவடியை அடுத்த அண்ணனூர் ரெயில் நிலையம் வந்தார்.

டிக்கெட் எடுத்து விட்டு வருவதற்குள் நடைமேடையில் வந்து நின்ற மின்சார ரெயில் புறப்பட்டு சென்றது. இதனால் ராஜேஷ் கண்ணா, ஓடி வந்து ரெயிலில் ஏற முயன்றார்.

அப்போது கால் தவறி மின்சார ரெயிலுக்கும், நடைமேடைக்கும் நடுவில் உள்ள பகுதி வழியாக தண்டவாளத்தில் விழுந்து விட்டார். அவரது காலில் ரெயில் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவரது 2 கால்களும் முட்டுக்கு கீழே துண்டானது.

உயிரிழந்தார்

ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் இரவு ராஜேஷ் கண்ணா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலியான ராஜேஷ்கண்ணாவுக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

மேலும் செய்திகள்