வங்கியில் புரபெசனரி அதிகாரி வேலை 300 பணியிடங்கள்

தேனா வங்கியில் புரபெசனரி அதிகாரி மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கு 300 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Update: 2017-04-24 17:21 GMT
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

பொதுத்துறை வங்கிகளில் ஒன்று தேனா வங்கி. மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கியில் புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. ‘ஜூனியர் மேனேஜ்மென்ட் கிரேடு - ஸ்கேல் 1’ தரத்திலான இந்த அதிகாரி பணியிடங்கள், பயிற்சியுடன் நிரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது. அதாவது முதுநிலை வங்கி - நிதிப் பணிகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள். அமிதி பல்கலைக்கழகத்தில் இதற்கான ஒரு வருட பயிற்சி வழங்கப்படுவதுடன், அதற்கான சான்றிதழும் வழங்கப்படு கிறது.
இந்த பணிக்கு மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பொதுப் பிரிவுக்கு 206 இடங்களும், ஓ.பி.சி. பிரிவுக்கு 22 இடங்களும், எஸ்.சி. பிரிவுக்கு 62 இடங்களும், எஸ்.டி. பிரிவுக்கு 10 இடங்களும் உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-4-2017-ந் தேதியில் 20 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனு மதிக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகளும், பிரிவுக்கு ஏற்ப கூடுதல் ஆண்டுகளும் வயது வரம்பு சலுகை அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால்போதுமானது.

தேர்வு செய்யும் முறை:

ஆன்லைன் தேர்வு, குழு கலந்துரையாடல், தனிநபர் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்:

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.50-ம், மற்றவர்கள் ரூ.400-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 9-5-2017-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும்.
இறுதியாக பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். இதற்கான தேர்வு 11-6-2017 அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.denabank.com என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

இதேபோல மற்றொரு அறிவிப்பின்படி, இதே வங்கியில் மேலாளர் (செக்யூரிட்டி) பணிக்கு 16 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டப்படிப்பு படித்த, 35 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இணையதள வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 29-4-2017-ந் தேதி. இது பற்றிய விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள முகவரியில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்