புதுவையில் தொடரும் பயங்கரம்: தலையில் கல்லை தூக்கிப்போட்டு பாலிடெக்னிக் மாணவர் கொலை

புதுச்சேரியில் தலையில் கல்லை துக்கிப் போட்டு பாலிடெக்னிக் மாணவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2017-04-26 23:45 GMT

புதுச்சேரி

புதுவை லாஸ்பேட்டை ஆனந்தா நகர் பகுதியில் உள்ள அன்னை தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவருடைய மகன் சுதாகர் (வயது 21). காரைக்காலில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் லாஸ்பேட்டை பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற கோவில் திருவிழாவின்போது வேப்பிலை வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது சுதாகருக்கும், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜேஷ் (23) என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சுதாகருக்கு ஆதரவாக அவருடைய நண்பர் இமான் வந்து ராஜேசுடன் வாக்குவாதம் செய்து அவரை தாக்கினார். இந்த மோதல் காரணமாக அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக ஒருவரை ஒருவர் தாக்குவதற்கு திட்டம் தீட்டியதாக தெரிகிறது.

தலையில் கல்லை போட்டு கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜேஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் 4 பேர் சேர்ந்து சுதாகரை சமாதானம் பேசுவதற்காக அழைத்தனர். இதனை நம்பி சுதாகரும் அவர்களுடன் சென்றார். தமிழக பகுதியான நாவற்குளம் சுடுகாடு பகுதிக்கு சென்ற அவர்கள் அங்கு பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த ராஜேசும், அவருடைய நண்பர்களும் சேர்ந்து சுதாகரை அடித்து உதைத்து கீழே தள்ளினர். அருகில் கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டனர். இதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே சுதாகர் உயிரிழந்தார்.

நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே லாஸ்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

3 பேரை பிடித்து விசாரணை

கொலை செய்யப்பட்ட இடம் தமிழக பகுதியில் என்பதால் இதுகுறித்து ஆரோவில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுதாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக லாஸ்பேட்டையைச் சேர்ந்த ராஜேஷ் உள்பட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் பல இடங்களில் கொலைகள் தொடர்ந்து நடந்துள்ளன. இந்தநிலையில் பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்