களக்காடு அருகே பயங்கரம் தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

களக்காடு அருகே தொழிலாளி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

Update: 2017-05-03 20:00 GMT
களக்காடு,

களக்காடு அருகே தொழிலாளி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

கூலி தொழிலாளி

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கக்கன்நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன். அவருடைய மகன் ராம்குமார் (வயது 37). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை 7 மணி அளவில் தனது மோட்டார்சைக்கிளில் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டார். மூங்கிலடி ரோட்டில் களக்காட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

கப்பலோட்டிய தமிழன் தெரு பகுதியில் மெயின் ரோட்டின் வடபுறம் பிள்ளையார் கோவில் அருகே வந்த போது, திடீரென ஒரு கும்பல் அவரது மோட்டார்சைக்கிளை வழிமறித்தது.

சரமாரியாக வெட்டிக் கொலை

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் ராம்குமாரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே ராம்குமார் பரிதாபமாக இறந்தார். இதனை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் ராம்குமாரின் குடும்பத்தினர் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தனர். அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இதுபற்றி களக்காடு போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்–இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். ராம்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

முன்விரோதம் காரணமா?

கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாக ராம்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த மர்ம நபர்களுக்கும் இடையே மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த முன்விரோதத்தில் ராம்குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ராம்குமாருக்கு தங்கபாய் (35) என்ற மனைவியும், இந்துஜா (12), அபிநயா (7), தர்ஷினி (5), முகேஷ் (2) ஆகிய 4 குழந்தைகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்