கை செலவுக்கு ரூ.13 கோடி

‘பைரட்ஸ் ஆப் தி கரீபியன்’ திரைப்பட புகழ் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப். இவருக்கு தற்போது பணநெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

Update: 2017-05-27 07:24 GMT
‘பைரட்ஸ் ஆப் தி கரீபியன்’ திரைப்பட புகழ் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப். இவருக்கு தற்போது பணநெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அதற்கு அவரேதான் காரணம். பின்ன.. மாதந்தோறும் ரூ.13 கோடியை வீணாக விரயம் செய்தால் என்ன செய்வது.

இரண்டு முறை திருமண வாழ்க்கையை உதறி தள்ளிய ஜானி டெப், தற்போது சிங்கிளாக சுற்றி வருகிறார். ‘பைரட்ஸ் ஆப் தி கரீபியன்’ தவிர, ஜானி டெப்பின் கைவசம் ஏராளமான திரைப்படங்கள் இருக்கிறது. இந்தநிலையில் அவரது வங்கி கணக்கில் இருந்து, பணம் குறைந்து விட்டது என்ற தகவல் வந்திருக்கிறது.

இதுபற்றி தன்னுடைய கணக்கு வழக்குகளை கவனித்துக் கொள்ளும் ஏஜெண்டிடம் கேட்க, அவரும் ‘ஆமாம்! பண இருப்பு குறைந்து விட்டது’ என்று பதிலளித்திருக்கிறார்.

இதனால் கடுப்பான ஜானி டெப், அவரை நீக்கிவிட்டு, கணக்கு வழக்குகளை கவனித்துக் கொள்ளும் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். பண வி‌ஷயத்தில் அந்த நிறுவனம் தனக்கு தெரியாமல் ஏதேதோ தில்லாலங்கடி வேலை செய்துள்ளதாக டெப் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் அந்த நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது. ‘ஜானி டெப்பின் நிதி நிலைமையை நாங்கள் கவனித்து வந்தது உண்மை தான். ஆனால் அவர் செலவு செய்வதை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. அவர் மாதத்திற்கு ரூ.13 கோடி செலவு செய்துவிட்டு நாங்கள் ஏதோ செய்ததாக கூறுகிறார்’ என்றது. மேலும் ஜானி டெப் அளவில்லாமல் குடிப்பவர் என்றும், 5 நட்சத்திர ஓட்டல்கள்–சொகுசு விடுதிகளில் நேரம் காலம் தெரியாமல் குடித்தே பாதி சொத்தை அழித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.

இறுதியில் ‘ஆனது ஆகட்டும். எதுவாக இருந்தாலும் சட்டப்படி பார்த்து கொள்ளலாம். அவர் குடித்து அழித்த பணத்திற்கு தகுந்த ஆதாரமும், முறையான கணக்கு வழக்குகளும் இருக்கிறது. நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறோம்’ என்று அந்த நிறுவனத்தினர்  கைகழுவி விட்டனர்.

இதனால் ஜானி டெப் சோர்ந்து போய் விட்டார். லாஸ் ஏஞ்சலில் இருக்கும் 14 வீடுகளை விற்று நிதிநிலைமையை சரி செய்து கொள்ளலாம் என்ற திட்டத்தில் மும்முரமாக இறங்கியிருக்கிறாராம்.

மேலும் செய்திகள்