தட்சிண கன்னடா மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் 4 தாலுகாக்களில் 144 தடை உத்தரவு

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா கல்லடுக்கா பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருபிரிவினர் இடையே பயங்கர கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

Update: 2017-06-15 23:29 GMT

மங்களூரு

தட்சிண கன்னடா மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் புத்தூர், பண்ட்வால், சுள்ளியா, பெல்தங்கடி ஆகிய 4 தாலுகாக்களில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

2 பேருக்கு கத்திக்குத்து

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா கல்லடுக்கா பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருபிரிவினர் இடையே பயங்கர கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அந்தப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் கல்லடுக்கா பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த 13–ந்தேதி இரவு கல்லடுக்கா பகுதியில் வசித்து வரும் இந்து அமைப்பின் மாவட்ட தலைவர் ரத்னாகர் செட்டியை யாரோ மர்மநபர்கள் கத்தியால் குத்தினர். மேலும் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர்.

இதற்கிடையே நள்ளிரவில் கல்லடுக்கா பகுதியில் மற்றொரு தரப்பின் நிர்வாகியான கலீல் என்பவரை மர்மநபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்த 2 பேரையும் அந்தப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் கல்லடுக்கா மட்டுமல்லாது தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

144 தடை உத்தரவு நீட்டிப்பு

இதுபற்றி தகவல் அறிந்ததும் தட்சிண கன்னடா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பூ‌ஷன் குலாப்ராவ் போரஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அந்தப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் புத்தூர், பண்ட்வால், சுள்ளியா, பெல்தங்கடி ஆகிய 4 தாலுகாக்களிலும் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டது. ஆனாலும், அந்தப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் அந்த 4 தாலுகாக்களிலும் வருகிற 21–ந்தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பூ‌ஷன் குலாப்ராவ் போரஸ் தெரிவித்தார். மேலும் பாதுகாப்பு பணிக்காக ஹாசன், சிக்கமகளூரு பகுதிகளில் இருந்து கூடுதல் போலீஸ் படையும் கல்லடுக்கா பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ் ஐ.ஜி. ஆலோசனை

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மேற்கு மண்டல சரக போலீஸ் ஐ.ஜி. ஹரிசேகரன் கல்லடுக்கா போலீஸ் நிலையத்துக்கு வந்து போலீசாருடன் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே கல்லடுக்கா போலீஸ் நிலையத்துக்கு வந்த அந்தப்பகுதி மக்கள், கடந்த 2 மாதங்களாக எங்கள் பகுதியில் இருபிரிவினர் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. இதனை தடுக்க வேண்டும். இந்த மோதலில் தொடர்பு இல்லாதவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. மோதலில் தொடர்புடையவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட போலீஸ் ஐ.ஜி. ஹரிசேகரன், மோதல் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்